மாற்று விக்கெட் கீப்பர்
டெஸ்ட் அணியில் தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக நீண்ட காலம் செயல்பட்டவர் விரிதிமான் சாஹா தான். இடையே அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் அணியில் ஆடினர். அவர்கள் யாரும் திருப்தி அளிக்காத நிலையில், ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றார்.
ரிஷப் பண்ட் நிலை
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்த பண்ட், டி20, ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றார். எனினும், 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் பார்ம் அவுட் ஆன அவர், பேட்டிங் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வந்தார்.
இனி வாய்ப்பே இல்லை
இந்த நிலையில், சாஹா அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் திடீரென கேப்டன் கோலி, ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு அளித்து அதிர்ச்சி அளித்தார். பண்ட், சாஹாவை விட சிறந்த பேட்ஸ்மேன் என ஒரு காரணம் கூறப்பட்டது.
சாஹாவுக்கு வாய்ப்பு மறுப்பு
விரிதிமான் சாஹா அணியில் இருந்தவரை இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களின் போது அவரை உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என புகழ் பாடிய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி, திடீரென வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் அவரை நீக்கியதும் அதிர்ச்சி அளித்தது.
தாக்கம் இல்லை
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நான்கு இன்னிங்க்ஸ்களில் அதிகபட்சமாக 25 ரன்கள் தான் எடுத்து இருந்தார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடாததால், பண்ட் விமர்சனத்தில் இருந்து ஓரளவு தப்பினார்.
சந்தீப் பாட்டில் விமர்சனம்
இந்த நிலையில், முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவரும் ஆன சந்தீப் பாட்டில், "ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள். ஆனால், விரிதிமான் சாஹாவின் கிரிக்கெட் வாழ்வில் விளையாடுகிறீர்கள்" என கேப்டன் கோலியின் முடிவை கடுமையாக சாடி இருக்கிறார்.
அனுபவம் உள்ளது
மேலும், "சாஹா தான் என் முதல் விருப்ப விக்கெட் கீப்பர். ஏனெனில், நமக்கு அனுபவம் தான் வேண்டும். அவர் அதிக அனுபவம் கொண்டவர். சாஹா அணியை பல முறை காப்பாற்றி இருக்கிறார். அப்புறம் ஏன் அவரது பேட்டிங் மன உறுதியை உடைக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
எனக்கு தெரியும்
மேலும், "சாஹாவால் என்ன செய்ய முடியும் என எனக்கு தெரியும். அவர் சதம் அடித்த போது, நான் வெஸ்ட் இண்டீஸில் தான் இருந்தேன்" என சாஹாவின் சிறந்த டெஸ்ட் ஆட்டம் பற்றி உதாரணம் கூறி, கோலியின் முடிவை விமர்சித்தார் சந்தீப் பாட்டில்.
பண்ட்டுக்கு இனியும் வாய்ப்பு?
ரிஷப் பண்ட்டுக்கு இனியும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்வி உள்ளது. சிலர் அவருக்கு டெஸ்ட் அணி மட்டுமில்லாமல், இனி ஒருநாள் மற்றும் டி20 அணியில் கூட இடம் கிடைப்பது கடினம் தான் எனக் கூறி உள்ளனர்.