இந்தியா - நியூசிலாந்து தொடர்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் முடிந்த ஐந்தாம் நாள் இந்த போட்டியில் இந்திய அணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வெற்றி
முதல் டி20 போட்டியில் டாஸ் வென்றார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. டாஸ் வென்ற பின், இந்தியா முதலில் பந்துவீச உள்ளதாக அறிவித்தார். காரணம், மாலை நேரத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
ஆடுகளம் எப்படி?
மேலும், இந்தப் போட்டி நடைபெறும் ஈடன் பார்க் ஆடுகளம் பேட்டிங் செய்ய எளிதான ஆடுகளமாக கருதப்படுகிறது. அதனால், அதில் எந்த சவாலான இலக்கையும் சேஸிங் செய்து வெற்றி பெற முடியும் என கூறப்படுகிறது. கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்ய இதுவும் ஒரு முக்கிய காரணம்.
அணியில் ஆடாத ஐவர்
டாஸ் வென்ற பின் களமிறங்கும் இந்திய அணி குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, இந்திய அணியில் ஐந்து வீரர்கள் ஆடவில்லை என்றார். அவர்கள் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன்.
வாய்ப்பை இழந்த பண்ட்
ரிஷப் பண்ட் உலகக்கோப்பை முதல் கடந்த இலங்கை டி20 தொடர் வரை இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக நீக்கப்பட்டார். காயம் குணமான நிலையிலும், தொடர்ந்து நியூசிலாந்து முதல் டி20 போட்டியில் தன் இடத்தை இழந்துள்ளார்.
விக்கெட் கீப்பர் ராகுல்
ஆஸ்திரேலிய தொடரில் பண்ட்டுக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை கூடுதலாக செய்த துவக்க வீரர் கேஎல் ராகுல், நியூசிலாந்து தொடரிலும் விக்கெட் கீப்பராக தொடர்கிறார். அவர் கீப்பிங் செய்வதால் பேட்டிங் வரிசயில் கூடுதல் வீரரை ஆட வைக்க முடிவதாக கோலி கருதுகிறார்.
மனிஷ் பாண்டேவுக்கு இடம்
ரிஷப் பண்ட் இடத்தை முழுமையான பேட்ஸ்மேன் ஆன மனிஷ் பாண்டேவுக்கு அளித்துள்ளார் கேப்டன் கோலி. இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்றுள்ளது. ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்பியதால் தான் அவரது இடம் மனிஷ் பாண்டேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் நீக்கம்
சுழற் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் டி20 அணியின் நிரந்தர வீரராக இடம் பெற்று வந்த நிலையில், நியூசிலாந்து முதல் டி20 போட்டியில் அவர் களமிறங்கவில்லை. அவருக்கு தற்காலிகமாக ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
மீண்டும் ஜடேஜா
சுந்தருக்கு பதில் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளார். இருவரும் ஆல்-ரவுண்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், வலுவான நியூசிலாந்து அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த ஜடேஜாவை களமிறக்கி இருக்கிறார் கேப்டன் கோலி.
இந்திய அணி விவரம்
முதல் டி20யில் ஆடும் இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், பும்ரா, சாஹல், முகமது ஷமி