டெஸ்ட் தொடர் தோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 5 - 0 என வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 0 - 3 என இழந்தது. அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்திய அணி அதையும் 0 - 2 என இழந்துள்ளது.
கோலியின் மாற்றம்
இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் களத்தில் அமைதியாக காணப்பட்டார் கேப்டன் விராட் கோலி. வழக்கமாக அவர் ஆக்ரோஷமாக இருப்பார். அவரது ஆக்ரோஷம் காணாமல் போனது தான் இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணம் என சிலர் கூறினர்.
மீண்டும் ஆக்ரோஷம்
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பழைய பாணியில் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் கோலி. விக்கெட் வீழ்ச்சியின் போது கத்தி கூச்சல் இட்டார். நியூசிலாந்து ரசிகர்களை திட்டி கிண்டல் செய்தார். கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது அவரது நடவடிக்கைகள்.
கேன் வில்லியம்சன் விக்கெட்
முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட் வீழ்ந்த போது, துள்ளிக் குதித்தார் கோலி. அதோடு நில்லாமல், வில்லியம்சனை பார்த்து ஹிந்தியில் உள்ள கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்தார். அது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
ரசிகர்களுக்கு திட்டு
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து ரசிகர்கள் கோஷங்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தார். ஒரு முறை குடிகாரர்கள் என ரசிகர்களை குறிப்பிட்டு சைகை செய்தார். குடிப்பது போல செய்து காட்டி, பின் மயங்குவது போல நடித்தார். இவை எல்லை மீறியதாக இருந்தது.
மோசமான சைகை
மற்றொரு முறை விக்கெட் வீழ்ந்த போது உதட்டில் விரல் வைத்து, அமைதியாக இருக்கும் படி கூறினார். பின் ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தையால் திட்டினார். அவர் கூறியது வீடியோவில் பதிவானது. அது பரபரப்பை கிளப்பியது.
தடை விதிக்க வாய்ப்பு
விராட் கோலியின் இந்த செயல்பாடுகளுக்கு ஐசிசி விதிப்படி தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அது பற்றி இதுவரை மேட்ச் ரெப்ரீ மற்றும் ஐசிசி எதுவும் கூறவில்லை. இந்த நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் இது பற்றி கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்வி
அவர் கேட்ட அந்த கேள்வி - களத்தில் நீங்கள் கேன் வில்லியம்சனை திட்டியது, கூட்டத்தினரை திட்டியது போன்ற உங்கள் செயல்பாடுகளுக்கு உங்களின் பதில் என்ன? ஒரு இந்திய அணியின் கேப்டனாக நீங்கள் களத்தில் சிறந்த உதாரணமாக நடந்து கொண்டிருக்க வேண்டாமா?
கோபத்தில் எகிறிய கோலி
இதைக் கேட்ட கோலி, கேள்வி கேட்டவரிடமே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என திருப்பி கேட்டார். அதற்கு அந்த நிருபர் நீங்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்றார். அப்போது கோபத்தில் எகிறினார் கோலி. "என்ன நடந்தது என தெரிந்து கொண்டு, நல்ல கேள்விகளுடன் வாருங்கள்" என்றார்.
கடும் கோபம்
மேலும், "நீங்கள் என்ன நடந்தது என தெரியாமல், பாதி கேள்விகள், பாதி பதிலுடன் இங்கே வராதீர்கள். அதே போல, சர்ச்சை கிளப்ப நினைத்தால், இது அதற்கான இடமல்ல. நான் மேட்ச் ரெப்ரீயிடம் பேசி விட்டேன். அவருக்கு நடந்தவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறி விட்டார். நன்றி" என கடும் கோபமாக பதில் அளித்தார் கோலி.