முதல் டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து 0 - 1 என தொடரின் பின் தங்கி உள்ளது. இரண்டாவது போட்டியில் வென்றால் அதிகபட்சமாக தொடரை சமன் செய்ய முடியும்.
பேட்டிங் சறுக்கல்
இந்த நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் செய்த தவறுகளை மாற்றிக் கொள்ள திட்டமிட்டு வருகிறது. முதல் டெஸ்டில் பேட்டிங் தான் படுமோசமாக இருந்தது. மயங்க் அகர்வால், அஜின்க்யா ரஹானே மட்டுமே தடுமாறாமல் பேட்டிங் செய்தனர். ஓரளவு ரன் எடுத்தனர்.
நியூசிலாந்து வியூகம்
நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களின் நகர்வுகளை சரியாக ஊகித்து, பந்தை அடிக்க முடியாதபடி பவுன்ஸ் ஆகியும், அவுட்சைடு ஆஃப் திசையில் அடிக்கத் தூண்டி விக்கெட்டை பறி கொடுக்க வைக்கும் வகையிலும் பந்து வீசினர்.
200-ஐ தாண்டாத இந்தியா
முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி, இரண்டாம் இன்னிங்க்ஸில் 191 ரன்கள் எடுத்தது. இரண்டு இன்னிங்க்ஸிலும் 200 ரன்களை கூட தாண்டவில்லை. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஏன் இப்படி சறுக்கியது? என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.
புஜாரா பேட்டிங்
டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் புஜாரா, இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் தலா 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். அதிலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 81 பத்துகளை சந்தித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஹனுமா விஹாரி என்ன செய்தார்?
அவரது பாதையை பின்பற்றி பேட்டிங் செய்யும் ஹனுமா விஹாரியும் அதே போலவே ஆடினார். 79 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் பல பந்துகளை வீணடித்தனர். ஒற்றை ரன் ஓடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தது.
கடும் விமர்சனம்
குறிப்பாக, புஜாரா ஆடிய ஆமை வேக ஆட்டத்தால், மறுபுறம் சரியாக ஆடி வந்த மயங்க் அகர்வால் ரன் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக கேட்ச் கொடுத்தார் என கடும் விமர்சனம் எழுந்தது. ஃபோர் அடிக்காவிட்டாலும், ஒற்றை ரன்கள் கூடவா எடுக்க முடியாது? என கேட்டுள்ளனர் விமர்சகர்கள்.
மாற்றம் வேண்டும்
இந்திய அணி கேப்டன் கோலி இந்த விஷயத்தில் அதிருப்தியில் இருக்கிறார். முதல் டெஸ்ட் முடிந்த உடன் பேசும்போது கூட பெயர் குறிப்பிடாமல், பந்துகளை வீணடிப்பதால் எந்த பயனும் இல்லை என சாடி இருந்தார். இரண்டாவது டெஸ்டில் நிச்சயம் புஜாரா, விஹாரி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கோலி நிலை என்ன?
முதல் டெஸ்டில் கேப்டன் கோலியின் பேட்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் அவசரப்பட்டு பந்தை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனால், அவரும் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.