டெஸ்ட் தொடர்
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கம் ஆகும். அதனால், இதில் வெற்றி பெற இந்தியா திட்டமிட்டு வருகிறது.
விக்கெட் கீப்பர் யார்?
இந்திய அணியில் ரிஷப் பண்ட் - விரிதிமான் சாஹா இருவரில் யாரை அணியில் ஆட வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சாஹா கடந்த இரு டெஸ்ட் தொடர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எனினும், அதிரடி பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் பண்ட்டை அணியில் சேர்ப்பது குறித்து இந்திய அணியில் ஒரு திட்டம் உள்ளது.
சிறந்த விக்கெட் கீப்பர் சாஹா
விரிதிமான் சாஹா தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பிய போது அவர் தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கேப்டன் கோலி கூறினார். அதே போல, வேகப் பந்துவீச்சில் கேட்ச்களை தவறாமல் பிடிப்பதில் உலக சாதனை செய்தார்.
பண்ட் நிலை என்ன?
மறுபுறம் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் சொதப்பி வந்ததோடு, விக்கெட் கீப்பிங்கிலும் கேட்ச்களை கோட்டை விட்டு வந்தார். அதனால், அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாத கேப்டன் கோலி, தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் அவருக்கு வாய்ப்பை மறுத்து வந்தார்.
பண்ட் தேர்வு?
எனினும், தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சாஹாவை விட, ரிஷப் பண்ட் சிறப்பாக ரன் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் அவரை தேர்வு செய்ய உள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது. அது குறித்து சில புள்ளி விவரங்களும் கூறப்படுகின்றன.
பேட்டிங் சராசரி
டெஸ்ட் போட்டிகளில் பண்ட் குறைந்த போட்டிகளில் ஆடி இருந்தாலும், அவரது பேட்டிங் சராசரி 44க்கும் மேல் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 70.79 ஆகும். அதே சமயம், விரிதிமான் சாஹாவின் பேட்டிங் சராசரி 30ஐ ஒட்டியே உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 45.5 ஆகும்.
டெஸ்ட் போட்டிகளில் பண்ட்
ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இதுவரை பெரிதாக சாதனை செய்யாத பண்ட், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு முறை 90+ ரன்கள் எடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஆடுகளம்
வெளிநாடுகளில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தான் அவர் தன் இரண்டு சதங்களையும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவரது சமீபத்திய பார்ம் கவலை அளிப்பதாகவே உள்ளது.
நல்ல கீப்பர் - நல்ல பேட்ஸ்மேன்
விரிதிமான் சாஹா நல்ல விக்கெட் கீப்பர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை விட ரிஷப் பண்ட் நல்ல பேட்ஸ்மேன். இதுதான் கேப்டன் கோலிக்கு குழப்பத்தை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு நீண்ட பேட்டிங் வரிசை அவசியம்.
கேப்டன் கோலி திட்டம்
எனவே, கோலி ரிஷப் பண்ட்டை தேர்வு செய்து அதிரடி முடிவு எடுப்பார் என்றே பலரும் கருதுகிறார்கள். சிறந்த விக்கெட் கீப்பரை வெளியேற்றி விட்டு, ரிஷப் பண்ட்டை டெஸ்ட் அணியில் தேர்வு செய்வது என்பது சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியான முடிவாகவும் உள்ளது.