இந்திய அணி மாற்றம்
2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டி தோல்விக்கு பின் இந்திய ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 அணியில் இருந்து அஸ்வின், ஜடேஜா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு இளம் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வெற்றி ஜோடி
இருவரும் இணைந்து மிக சிறப்பாக எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வந்தனர். இருவரில் குல்தீப் யாதவ் தனியே தெரிந்தார். அவர் டி20யில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர் என கூறும் அளவிற்கு உயர்ந்தார். டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றார்.
2018ஆம் ஆண்டு
2018ஆம் ஆண்டில் 20 போட்டிகளில் 45 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார் குல்தீப் யாதவ். அவரது பந்து வீச்சு சராசரி 17.77 ஆக இருந்தது. அவரது எகானமி 4.64 ஆக இருந்தது. 2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஐபிஎல் சறுக்கல்
ஆனால், இடையே 2019 ஐபிஎல் தொடர் அவருக்கு பெரும் வினையாக வந்து அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய அவர் மிக மோசமாக பந்து வீசி, விக்கெட் எடுக்க திணறி வந்தார். ஒரு போட்டியில் அவரது பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன் நிலைகுலைய வைத்த போது, உடைந்து போனார்.
உலகக்கோப்பையில் குல்தீப்
அது தான் குல்தீப் யாதவ்வின் சரிவின் துவக்கம். அதன் பின் தன்னம்பிக்கை இழந்து காணப்பட்ட அவர், அடுத்து நடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் சுமாராகவே செயல்பட்டார். சாஹல் அவரை விட சிறப்பாக பந்து வீசி பாராட்டைப் பெற்று வந்தார்.
சரிந்த செயல்பாடு
2019 ஆம் ஆண்டு அவரது பந்து வீச்சு முற்றிலும் வலுவிழந்தது. 23 போட்டிகளில் 35 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 34.68 ஆக மாறியது. அவரது பந்துவீச்சு எகானமி 5.33 ஆனது. 2018இல் இருந்த குல்தீப் யாதவ், இப்போது இல்லை.
தொடர் வாய்ப்பு
எனினும், குல்தீப் யாதவ்வுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தார் கேப்டன் விராட் கோலி. இடையே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சாஹல் பயன்படுத்தப்பட்டார். இந்த நிலையில், நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பங்கேற்றார்.
84 ரன்கள்
அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 84 ரன்கள் வாரி இறைத்து அதிர்ச்சி அளித்தார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் குல்தீப் யாதவ் ஓவரை குறி வைத்து தாக்கினர். இந்த நிலையில், அவரை இரண்டாவது ஒருநாள் போட்டியில் தேர்வு செய்வது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
உஷார்
எதிரணி பேட்ஸ்மேன்கள் வீடியோக்கள் மூலம் குல்தீப் யாதவ் பந்து வீச்சை சமாளிக்க பயிற்சி மேற்கொண்டு வருவதால், அவரை எளிதாக அடித்து ஆடி வருவதகா பல முன்னாள் வீரர்கள் கூறி உள்ளனர். இதை முற்றிலும் மறுக்கவும் முடியவில்லை.
அணியில் நீக்கம்?
குல்தீப் யாதவ்வுக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பு அளித்து விட்ட நிலையில், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே சில விமர்சகர்கள் கூறி உள்ளனர். நியூசிலாந்து ஒருநாள் தொடரிலேயே அது நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.