டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரை 5 - 0 என வென்று அசத்தியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0 - 3 என இழந்து அதிர்ச்சி அளித்தது, இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்தியா தோல்வி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்க்ஸில் 165, இரண்டாவது இன்னிங்க்ஸில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு முறை கூட 200 ரன்களை தாண்டாமல் அதிர்ச்சி அளித்தது.
காரணம் என்ன?
நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சை இந்திய அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. மயங்க் அகர்வால் 58 ரன்கள் எடுத்ததே இந்தப் போட்டியில் தனிப்பட்ட இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மயங்க் மற்றும் ரஹானே மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினர். அவர்களாலும் பெரிய அளவுக்கு ரன் குவிக்க முடியவில்லை.
பவுன்ஸ் பந்துகள்
நியூசிலாந்து ஆடுகளங்கள் இயல்பாகவே அதிக பவுன்ஸ் ஆகும் வகையில் இருக்கும். அதை பயன்படுத்திய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தனர். அது விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
நியூசிலாந்து திட்டம்
இந்திய அணியின் முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் விராட் கோலியை குறி வைத்து, திட்டமிட்டு பந்து வீசினர் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள். அவர்கள் குழுவாக செயல்பட்டனர். ஆடுகளத்தை மிக சிறப்பாக பயன்படுத்தினர்.
இரண்டாவது போட்டி பிட்ச்
இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற ஆடுகளம் தான் முக்கியம் என கருதும் நியூசிலாந்து அணி, பச்சை பசேல் என பிட்ச் தயார் செய்துள்ளது. பிட்ச்சை சுற்றி உள்ள இடங்களில் இருக்கும் அதே அளவுக்கு புற்கள், ஆடுகளத்திலும் உள்ளது.
|
ஆடு, மாடு மேயும் இடம்
அதனால், பிட்ச் பச்சை பசேல் என காணப்படுகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் இது ஆடு, மாடு மேயும் இடம் என கிண்டல் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு புற்கள் நிறைந்து காணப்படுகிறது ஆடுகளம்.
|
ஏன் இப்படி?
பொதுவாக டெஸ்ட் போட்டிகள் என்றாலே சொந்த மண்ணில் ஆடும் அணி தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை தயார் செய்து கொள்ளும். இந்தியாவில் காலம் காலமாக சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் விரிசல் கொண்ட ஆடுகளங்களே தயார் செய்யப்பட்டு வந்தது.
சாதகம்
சமீபத்தில் இந்தியா வேகப் பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளங்களை தயார் செய்து வருகிறது. காரணம், இந்திய அணியில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதே போல தங்களுக்கு சாதகமாக பிட்ச் தயார் செய்து வருகிறது நியூசிலாந்து அணி.
|
இந்தியா வெல்லுமா?
இதை பிசிசிஐ கிண்டல் செய்து இருந்தாலும், அவர்களும் இதையே தான் செய்கிறார்கள் என ரசிகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லுமா?.