முதல் டெஸ்ட்
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, மோசமாக தடுமாறியது.
கை விட்ட வீரர்கள்
துவக்க வீரர்களில் மயங்க் அகர்வால் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 34 ரன்கள் சேர்த்தார். ப்ரித்வி ஷா 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அனுபவ வீரர்கள் கை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்களும் அணியை கை விட்டனர்.
ஏமாற்றம்
டெஸ்ட் மன்னன் புஜாரா 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி சமீப காலங்களில் சதம் அடிக்காத நிலையில், அந்த குறையைப் போக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ரஹானே - பண்ட் ஜோடி
பயிற்சிப் போட்டியில் சதம் அடித்த விஹாரியும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, இந்திய அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்தது. அப்போது அஜின்க்யா ரஹானே - ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் மட்டுமே அணியை மீட்க இருக்கும் கடைசி பேட்ஸ்மேன்கள் என்ற நிலையில் நிதானமாக ஆடினர்.
அந்த பந்து
ரஹானே 39 ரன்களும், ரிஷப் பண்ட் 19 ரன்களும் எடுத்து ஆடி வந்தனர். அப்போது 59 வது ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த ரஹானே, பந்தை பேக்வேர்டு பாயின்ட் திசையில் தட்டி விட்டார், உடனே ரன் ஓட முயன்றார்.
கூச்சலிட்ட பண்ட்
அப்போது பந்தை பீல்டர் அஜாஸ் பட்டேல் எடுத்து விட்டார். எதிரில் இருந்த ரிஷப் பண்ட் இதை கவனித்து "வேண்டாம்" என பெரிதாக ரஹானேவை நோக்கி கூச்சலிட்டார். பந்தை பார்த்துக் கொண்டே ஓடி வந்த ரஹானே, எதிரில் ரிஷப் பண்ட் கத்தியதை கவனிக்கவில்லை.
விக்கெட்டை பறிகொடுத்தார்
ரஹானே பாதி தூரம் ஓடி வந்து விட்டதால், இனி திரும்ப முடியாது என முடிவு செய்து பந்துவீச்சாளர் திசையை அடைந்தார். ரிஷப் பண்ட், ரன் அவுட் ஆக அதிக வாய்ப்பு இருப்பது தெரிந்தும் ரன் ஓடி தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அஜாஸ் பட்டேல் என்ன செய்தார்?
அஜாஸ் பட்டேல் அதி வேக பீல்டர் இல்லை. அதனால், அவர் பந்தை எடுத்த உடன் எங்கே வீசுவது என புரியாமல் சில வினாடிகள் தடுமாறினார். பின்னர், விக்கெட் கீப்பர் திசையில் ஸ்டம்ப்புகளை நோக்கி பிட்ச் செய்து எறிந்தார்.
நேரடியாக அடித்தார்
அவர் பந்தை வீசிய போது அங்கே கீப்பர் இல்லை. அவர் ஓடி வந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில், பந்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தது. ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார், ஒருவேளை பந்து நேரடியாக ஸ்டம்ப்பில் படாமல் போயிருந்தால், பண்ட் தப்பித்து இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
|
விக்கெட் சரிவு
ரிஷப் பண்ட் அவுட்டான பின் இந்திய அணியின் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. ரஹானே 46 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஷமி கடைசி நேரத்தில் 21 ரன்கள் எடுத்து உதவினார். இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.