குற்றச்சாட்டு
தேசிய கிரிக்கெட் அகாடமி தான் இஷாந்த் சர்மாவுக்கு புத்துணர்வு பயிற்சிகள் அளித்து, உடற்தகுதியை சோதித்து மீண்டும் ஆட அனுமதி அளித்தது. அந்த அகாடமியின் தலைவர் டிராவிட் மீது தற்போது பிசிசிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
பிசியோதெரபிஸ்ட் சிக்கல்
தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபிஸ்ட் தான் இந்திய வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு, அணிக்கு திரும்ப பயிற்சிகள் அளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் அங்கு இருந்த மோசமான நிலை காரணமாக பல இந்திய வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.
டிராவிட் வந்தார்
அங்கே புத்துணர்வு முகாமில் பங்கேற்ற புவனேஸ்வர் குமார், விரிதிமான் சாஹா உள்ளிட்ட வீரர்கள் தங்கள் காயத்தை மோசமாக்கிக் கொண்ட வரலாறும் உண்டு. இந்த நிலையில், ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.
மாறவில்லை
அவர் பதவிக்கு வந்த பின்னும் அங்கே இருந்த நிலை மாறவில்லை. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஹர்திக் பண்டியா, பும்ரா ஆகியோர் தங்களுக்கு சொந்த உடற்பயிற்சி நிபுணர்களை நியமித்து புத்துணர்வு பெற்று போட்டிகளுக்கு தயார் ஆனார்கள்.
கங்குலி முடிவு
இந்த விஷயத்துக்கு முடிவு கட்ட வேண்டி பிசிசிஐ தலைவர் கங்குலி -- தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் டிராவிட் பேசி முடிவெடுத்தனர். இனி அந்த அகாடமியில் உலகத்தரமான சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் அனைத்து வீரர்களும் அங்கே தான் இனி செல்ல வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. ஆனாலும், நிலைமை மாறவில்லை.
இஷாந்த் சர்மா காயம்
வீரர்கள் அங்கே தான் செல்கிறார்கள். ஆனால், சிகிச்சை அளிக்கும் நிலை மாறவில்லை. சமீபத்தில் நியூசிலாந்து தொடருக்கு முன் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடிய இஷாந்த் சர்மா வலது காலில் காயம் அடைந்தார். அவருக்கு தசை நார் கிழிந்து இருந்தது.
ஆறு வாரம்
அவரது காயம் குறித்து அறிக்கை அளித்த டெல்லி மாநில கிரிக்கெட் அணி (இஷாந்த் சர்மா டெல்லி அணிக்காக ஆடுகிறார்) பிசியோதெரபிஸ்ட் அளித்த அறிக்கையில் அவரது காயம் குணமாக ஆறு வாரம் ஆகும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இஷாந்த் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.
என்ன நடந்தது?
அங்கே தீவிர பயிற்சிகள் மேற்கொண்ட இஷாந்த் சர்மா, மூன்றே வாரங்களில் இந்திய அணியில் ஆட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு 3 நாட்கள் முன் அணியில் இணைந்தார். அங்கே ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய அவருக்கு, அதே வலது காலில் மீண்டும் வலி ஏற்பட்டு இரண்டாம் போட்டியில் ஆட முடியாத நிலைக்கு ஆளானார்.
விமர்சனம்
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி எந்த அடிப்படையில் இஷாந்த் சர்மா கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடலாம் என அறிக்கை அளித்தது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதில் இந்திய அணி நிர்வாகம், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இஷாந்த் சர்மாவை விரைவாக தயார் செய்ய அழுத்தம் கொடுத்தார்களா? என்ற கேள்வியும் அடங்கி உள்ளது.
ஆஷிஷ் கௌஷிக்
எது எப்படியோ, வீரர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு உள்ளது. அதன் பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கௌஷிக் மற்றும் ஒப்புதல் அளித்த தலைவர் ராகுல் டிராவிட் மீது தான் பிசிசிஐ அதிகாரிகள் விமர்சனம் எழுப்பி உள்ளனர்.
Recommended Video
அழுத்தம்
ஆஷிஷ் கௌஷிக்கை மாற்ற வேண்டும் எனவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அது நடக்குமா? என்பது தெரியவில்லை. மிகச் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஆன ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பில் தேவையற்ற அழுத்தத்தை சந்தித்து வருவதை கவலையுடன் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.