பவுலிங் அதிர்ச்சி
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் 165 மற்றும் 191 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ஏமாற்றி இருந்தது. அதை விட பந்து வீச்சில் கடைசி 3 விக்கெட்களை வீழ்த்தும் முன் 123 ரன்கள் கொடுத்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.
பிரச்சனையாக உள்ளது
அது பற்றி பேசிய ரவி சாஸ்திரி, கடந்த ஆண்டிலும் அது எங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. சில நாட்கள் நாங்கள் எளிதாக பின்வரிசை வீரர்களை வீழ்த்தி இருக்கிறோம். சில சமயம் அவர்கள் எதிர்த்து ஆடுகிறார்கள். அதை வேறு வகையில் அணுக நாங்கள் பேசி முடிவு செய்துள்ளோம் என்றார்.
அஸ்வின் பேட்டிங்
அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதே சமயம், பேட்டிங்கில் மொத்தமே 4 ரன்கள் தான் எடுத்தார். அதில் ஒரு முதல் பந்து டக் அவுட் வேறு. அஸ்வின் பேட்டிங்கில் சொதப்பியது பற்றி பேசினார் ரவி சாஸ்திரி.
பேட்டிங் ஏமாற்றம்
"அவர் உலகத்தரமான பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் எந்த சூழ்நிலையிலும் கடந்த காலங்களில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். ஆனால், அவர் பேட்டிங் செய்த விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. அவர் வரும் காலத்தில் தன் பேட்டிங்கை முன்னேற்ற விரும்புவார்" என்றார் ரவி சாஸ்திரி.
சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை
அடுத்து தோல்வி பற்றி பேசிய அவர், "நாங்கள் எந்த சாக்குபோக்கும் சொல்ல விரும்பவில்லை. முதல் டெஸ்டில் நாங்கள் வீழ்த்தப்பட்டோம். அது போன்ற அதிர வைக்கும் தோல்வி நல்லது தான். எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால், தோல்வியை சந்திக்காமல் இருந்தால், நாம் மூடப்பட்ட மனதை கொண்டு இருப்போம்" என்றார்.