ஆதரவு பெற்ற ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் இந்திய அணியில் தோனிக்கு அடுத்த முதன்மை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக சேர்க்கப்பட்டார். அவரது பேட்டிங் துவக்கம் முதலே விமர்சனம் பெற்று வந்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து ஆதரித்தார் கேப்டன் விராட் கோலி. முன்னாள் வீரர்களும் இந்த முடிவை ஆதரித்தனர்.
தொடர் பார்ம் அவுட்
ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தொடர்ந்து பல தவறான ஷாட்கள் ஆடி ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். 2019 இல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் முதல் அவரது பேட்டிங் பாதாளத்தை நோக்கி சென்றது. இருந்தாலும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார்.
சுமாரான விக்கெட் கீப்பிங்
ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங்கும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல கேட்ச்களை தவற விட்டார். ஸ்டம்பிங் வாய்ப்புகளை வீணடித்தார். மேலும், டிஆர்எஸ் ரிவ்யூ முடிவுகளில் தவறான ஆலோசனைகள் கூறி சொதப்பினார். அது பல நேரங்களில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
டெஸ்ட் அணியில் நீக்கம்
இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்டை தக்க வைத்த கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அணியில் அவருக்கு பதிலாக விரிதிமான் சாஹாவை மீண்டும் அணியில் சேர்த்தார். சாஹா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பண்ட் இனி டெஸ்ட் அணியில் அத்தனை எளிதில் நுழைய முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
மீண்டு வந்த பண்ட்
இதற்கு இடையே, இந்திய மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். அனைவருக்கும் நம்பிக்கை அளித்தார். இன்னும் சில போட்டிகளில் அவர் பேட்டிங்கில் தேறி விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
காயம் காரணமாக நீக்கம்
ஆனால், அடுத்து நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் கீப்பிங் செய்யவில்லை. இரு போட்டிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக துவக்க வீரர் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
ராகுல் அசத்தல் கீப்பிங்
ராகுல் விக்கெட் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டார். கடினமான குல்தீப், ஜடேஜாவின் சுழற் பந்துவீச்சை சமாளித்து கீப்பிங் செய்தார். மேலும், தோனி போல ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார். டிஆர்எஸ் ரிவ்யூ கேட்பதிலும் சிறப்பாக செயல்பட்டார். இவரை விக்கெட் கீப்பராக தொடர்ந்து ஆட வைக்கலாம் என்ற குரல்கள் எழுந்தன.
நியூசிலாந்து தொடரில்..
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் காயம் குணமாகி நல்ல நிலையில் இருந்தாலும், களமிறங்கும் இறுதி அணியில் சேர்க்கப்படவில்லை. கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் இடத்தில் பேட்டிங் செய்தார்.
காரணம் என்ன?
தற்போது டெஸ்ட் அணியில் இருந்து மட்டுமில்லாமல், டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் ரிஷப் பண்ட். கேப்டன் கோலி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம், அவரது பேட்டிங் அல்ல, விக்கெட் கீப்பிங் தான் என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கீப்பிங் முன்னேற வேண்டும்
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் திறன்கள் முன்னேறாவிட்டால், அவரது திறமை வீணாகப் போய் விடும் என கூறி இருக்கிறார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.