ரிஷப் பண்ட் பார்ம் அவுட்
ரிஷப் பண்ட் 2019 உலகக்கோப்பை தொடர் முதலே சரியாக ரன் குவிக்கவில்லை, தவறானஷாட்கள் ஆடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்தார். அதனால், டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழந்தார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று வந்தார்.
விக்கெட் கீப்பிங் மோசம்
அவரது பேட்டிங் அதன் பின்பும் முன்னேறவில்லை. மறுபுறம், விக்கெட் கீப்பிங்கிலும் கோட்டை விட்டு வந்தார் ரிஷப் பண்ட். அதனால், கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தார். இடையே ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த பண்ட், ஒரு போட்டியில் ஓய்வு எடுத்தார்.
இடத்தை பிடித்த ராகுல்
அப்போது தற்காலிகமாக விக்கெட் கீப்பிங் பணியை ஏற்றார் ராகுல். அவர் சிறப்பாக கீப்பிங் செய்ததை அடுத்து அவரை விக்கெட் கீப்பராக தொடர்ந்து இடம் பெற வைத்தார் கேப்டன் கோலி. நியூசிலாந்து டி20 தொடரிலும், ஒருநாள் தொடரிலும் அவரே கீப்பராக தொடர்ந்தார்.
வாய்ப்பு மறுப்பு
ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. அணியில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இருந்து வந்தார். அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர். இடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
பயிற்சிப் போட்டி
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாஹா தான் விக்கெட் கீப்பர் என்றாலும், பண்ட் பயிற்சிப் போட்டியில் கீப்பராக ஆடினார்.
ஏமாற்றம் அளித்தார்
முதல் இன்னிங்க்ஸில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அத்துடன் ரிஷப் பண்ட்டின் வாய்ப்புகள் இந்திய அணியில் முடிந்ததாகவே பலரும் கருதினர். நியூசிலாந்து தொடருக்கு அடுத்த தொடரில் அவர் நிச்சயம் இடம் பெறமாட்டார் என்ற நிலையே இருந்தது.
அதிரடி ஆட்டம்
இந்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதுவே அவருக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்பது அவருக்கும் தெரியும். இந்த நிலையில், 65 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டம் ஆடினார்.
நான்கு சிக்ஸ்
அவரது ஆட்டத்தில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் இஷ் சோதி வீசிய ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து மிரள வைத்தார் ரிஷப் பண்ட். அத்துடன் தன் பார்மை மீட்டு இருக்கிறார் பண்ட். தனக்கு அணியில் இடம் வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூறி இருக்கிறார் பண்ட்.
இடம் கிடைக்குமா?
எனினும், ரிஷப் பண்ட்டுக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சாஹா இருக்கும் வரை ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது கடினம் தான். எனினும், மாற்று விக்கெட் கீப்பராக தொடர்ந்து தன் இடத்தை தக்க வைத்துள்ளார்.