முதல் டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று துவங்கியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது கேப்டன் கோலி இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டார்.
அணித் தேர்வு
இந்திய அணியில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ப்ரித்வி ஷா துவக்க வீரராக களமிறங்கினார். அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அடுத்து நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்து இருந்தார் கோலி.
அஸ்வின் தேர்வு
வேகப் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அணியில் சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் மட்டுமே அணியில் இடம் பெற்றார். ஆல் - ரவுண்டர் ஜடேஜாவுக்கு அணியில் இடம் அளிக்கவில்லை கேப்டன் கோலி.
சாஹா நீக்கம்
அடுத்து விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு அளித்தார் கோலி. சாஹா உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கோலி சில மாதங்கள் முன்பு புகழ்ந்த நிலையில், அவரை நீக்கி உள்ளார்
பண்ட் தேர்வு
சாஹாவை விட ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் செய்வார், ரன் குவிப்பார் என்ற அடிப்படையில் அணியில் தேர்வு செய்துள்ளார் கேப்டன் விராட் கோலி. இந்த முடிவு பலத்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பலர் இதை எதிர்த்து வருகின்றனர்.
பண்ட் நிலை
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் பார்ம் அவுட் என கூறப்பட்டு, ரிஷப் பண்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், தற்போது அவரது பழைய டெஸ்ட் போட்டி ரன்களை காட்டி, டெஸ்டில் அவர் சிறப்பாக ஆடுவார் என அணியில் தேர்வு செய்துள்ளது விமர்சனத்தை சந்தித்துள்ளது.
சாஹா சராசரி
டெஸ்ட் போட்டிகளில் பண்ட்டின் பேட்டிங் சராசரி 45. சாஹாவின் பேட்டிங் சராசரி 30. இதனால் தான் சாஹா நீக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. எனினும், சில ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்பவரின் சராசரி 30 ரன்களாக இருந்தாலே போதுமே.. என கருத்து கூறி வருகின்றனர்.
விக்கெட் கீப்பிங்
அதே போல. ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதே உண்மை. மறுபுறம் விரிதிமான் சாஹா, தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடும் விக்கெட் கீப்பர்களில் சிறந்தவர் என பலராலும் புகழப்பட்டு இருக்கிறார். அவரை நீக்குவது கீப்பிங்கில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
|
ரசிகர்கள் விமர்சனம்
சிலர் கேப்டன் கோலியின் ஆதரவு இருப்பதால் தான் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார். இல்லையென்றால் மோசமாக ஆடி வரும் ரிஷப் பண்ட்டுக்கு எப்படி அணியில் வாய்ப்பு கிடைக்கும்? என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியா ஸ்கோர்
முதல் டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து, 55 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. ப்ரித்வி ஷா 16, மயங்க் அகர்வால் 34, புஜாரா 11, கோலி 2, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.