சஞ்சு சாம்சன் நிலை
சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு டி20 போட்டியில் ஆடினார். அதன் பின் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
களமிறங்கும் வாய்ப்பு
அவரது சிறப்பான செயல்பாடுகளால் இந்திய அணியில் சில மாதங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார். அவர் மாற்று வீரராகவே பல தொடர்களில் ஆடி வந்தார். அவருக்கு போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு காரணம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான்.
ரிஷப் பண்ட்டுக்கு முன்னுரிமை
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்ற இடத்தில் ஆடி வந்தார். அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் சொதப்பலாக இருந்த போதும் அவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதனால், சாம்சன் இரண்டாம் நிலை வீரராகவே அணியில் இருந்தார்.
ஒரே ஒரு போட்டி வாய்ப்பு
இலங்கை டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுமார் ஐந்து வருடம் கழித்து தன் இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் ஆடினார் சஞ்சு சாம்சன். அந்தப் போட்டியில் அவசரப்பட்ட அவர், ஒரு சிக்ஸ் அடித்து, அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அணியில் இடம்?
இதையடுத்து அவருக்கு மீண்டும் அணியில் இடம் மறுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து டி20 தொடரில் அவருக்கு முதலில் இடம் அளிக்கப்படவில்லை. பின்னர், ஷிகர் தவான் காயம் அடைந்ததால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் மாற்று வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நியூசி. தொடரில் இந்தியா வெற்றி
நியூசிலாந்து டி20 தொடரில் ரிஷப் பண்ட்டுக்கும் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ராகுல் கீப்பிங் பணியை செய்தார். இந்த நிலையில், இந்திய அணி டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் கைப்பற்றி 3 - 0 என்ற நிலையில் தொடரில் வெற்றி பெற்றது.
பரிசோதனை முயற்சி
அடுத்த இரு போட்டிகளில் இந்திய அணி பரிசோதனை முயற்சிகள் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவருக்கு நிச்சயம் அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என விமர்சகர்கள் கூறினர்.
சாம்சனுக்கு வாய்ப்பு
இந்த நிலையில், நான்காவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் சரியாக ரன் குவிக்காத நிலையிலும், தொடர்ந்து ஐந்தாவது டி20 போட்டியிலும் அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளித்தது இந்திய அணி.
வழிவிட்ட மூத்த வீரர்கள்
நான்காவது டி20 போட்டியில் மூத்த வீரரான ரோஹித் சர்மா அவருக்கு இடம் கொடுத்து விலகிக் கொண்டார். அந்தப் போட்டியில் அவர் ஆடவில்லை. அதே போல, ஐந்தாவது போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டார். ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
ரசிகர்கள் பாராட்டு
இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க, தங்கள் இடத்தை அளித்த மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது நல்ல முன் உதாரணம் என பலரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர். இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க, தங்கள் இடத்தை அளித்த மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது நல்ல முன் உதாரணம் என பலரும் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்.
சாம்சன் ஏமாற்றம்
இப்படி கடினமான வாய்ப்பை பெற்ற சஞ்சு சாம்சன் இந்த இரண்டு போட்டிகளிலும் ரன் குவிக்காமல், ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். நான்காவது டி20யில் 8 ரன்களிலும், ஐந்தாவது டி20யில் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.