தொடரை இழந்தது
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் தொடரை 0 - 2 என இழந்து அதிர்ச்சி அளித்தது. இந்த தொடரின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தான்.
விராட் கோலி மோசம்
கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் 4 இன்னிங்க்ஸில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷமி கூட அவரை விட ஆறு ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தார். புஜாரா, ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் தலா ஒரு அரைசதம் அடித்ததே ஆறுதலான விஷயம்.
ரஹானே நிலை
இந்த தொடரில் இந்தியா சறுக்கிய ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் துணை கேப்டன் ரஹானே தான். அவர் முதல் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் நிதான ஆட்டம் ஆடி 46 ரன்கள் சேர்த்து இருந்தார்.
ஸ்ட்ரைக் ரேட் மோசம்
ஆனால், அடுத்தடுத்த இன்னிங்க்ஸ்களில் அவரது ஆட்டம் இன்னும் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது ஸ்ட்ரைக் ரேட் படு மோசமாக 20, 30களில் தான் இருந்தது. அது தான் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
91 ரன்கள்
துணை கேப்டன் ரஹானே நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்க்ஸ்களில் 91 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 21.50 ஆகும். இதைக் குறிப்பிட்டு முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
ரஞ்சி ட்ராபி ஆட்டம்
மும்பை அணிக்காக ரஞ்சி ட்ராபி போட்டிகளில் ஆடிய போது ரஹானே மிக நிதானமாக ஆடியதை குறிப்பிட்டு அதற்கு காரணம் தோல்வி பயம் தான் என வெளிப்படையாக தாக்கி இருக்கிறார். மேலும், ரஹானேவின் கடந்த காலத்தை பற்றியும் பேசினார்.
வெறும் வரலாறு
ரஹானே இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். வெளிநாடுகளில் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அது எல்லாமே இப்போது வரலாறு தான். இப்போது அவர் வெறும் டெஸ்ட் வீரர் என முத்திரை குத்தப்பட்டுள்ளார் என்றார் பாட்டில்.
கிண்டல்
டெஸ்ட் வீரராக மட்டுமே இருக்கும் அவர், குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறிய பாட்டில், மனித இயல்பே ஒருவர் தன்னை சிறப்பான டெஸ்ட் வீரராக காட்டிக் கொள்வது தான். அதனால், அவர் ஒரு விஷயத்தை நிரூபிக்க போராடுகிறார் என கிண்டலாக கூறினார்.
பாதுகாவலர் போதும்
டெஸ்ட் வீரராக தன்னை நிரூபிக்க போராடும் ரஹானே, டெக்னிகலாக சரியாக ஆடுகிறேன், கிரீஸில் நீண்ட நேரம் நிற்கிறேன் என நிரூபித்து வருகிறார். கிரீஸில் தான் நிற்க வேண்டும் என்றால், அதற்கு பாதுகாவலர் போதும். யார் ரன் எடுப்பார்கள்? என சரமாரியாக தாக்கி இருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் தன்னை சுருக்கிக் கொண்டு தடுப்பாட்டம் ஆடினால், மற்ற வீரர்களையும் அது பாதிக்கும் எனவும் கூறினார்.