முதல் வாய்ப்பு
சஞ்சு சாம்சன் கடந்த 2015 ஆம் ஆண்டில் தன் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடி இருந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் வாய்ப்பு பெற்று இருந்தார். அதன் பின் அவருக்கு அணியில் நீண்ட காலமாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மாற்று பேட்ஸ்மேன் ஆனார்
ஐபிஎல் தொடர் மற்றும் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன், அணியில் மாற்று பேட்ஸ்மேன் ஆக இடம் பெற்றார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன் மாற்று பேட்ஸ்மேன் ஆக மட்டும் அணியில் இடம் பெற முக்கிய ரிஷப் பண்ட்.
ரிஷப் பண்ட் உடன் போட்டி
ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று வந்ததால் சஞ்சு சாம்சனால் பல தொடர்களில் களமிறங்கும் இறுதி அணியில் இடம் பெற முடியவில்லை. அவர் வெளியே அமர வைக்கப்பட்டு, தன் வாய்ப்புக்காக காத்திருந்தார்.
கிடைத்த வாய்ப்பு
இந்த நிலையில், அவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டியில் மட்டும் ஆட வைக்கப்பட்டார். அந்தப் போட்டியில் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டிய சஞ்சு சாம்சன், அடுத்த பந்திலும் அடித்து ஆட ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடினம்
அப்போதே இனி சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறப்பட்டது. இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக துவக்க வீரர் ஷிக தவான் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அணியில் மீண்டும் மாற்று வீரராக இடம் பெற்றார் சாம்சன்.
ரிஷப் பண்ட் நிலை
இதற்கிடையே, ரிஷப் பண்ட் அணியில் தன் விக்கெட் கீப்பர் வாய்ப்பை இழந்தார். துவக்க வீரர் கேஎல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பராக மாறினார். அதனால், சஞ்சு சாம்சன் - ரிஷப் பண்ட் இடையே ஆன போட்டி, யார் அணியின் மாற்று விக்கெட் கீப்பர் என்பதாக மாறி உள்ளது.
துவக்க வீரர் ஆன சாம்சன்
நியூசிலாந்து தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி நான்காவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது. அதன்படி, ரோஹித் சர்மா அணியில் ஓய்வு பெற்று, அவருக்கு பதில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கினார்.
ஏமாற்றினார்
இலங்கை தொடரில் ஏமாற்றிய சஞ்சு சாம்சன், இந்த முறை நிச்சயம் தன் திறமையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த முறையும் அடித்து ஆட ஆசைப்பட்டு ஏமாற்றினார். 8 ரன்கள் மட்டுமே எடுத்து தன் விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதிர்ச்சி
துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியிலும் ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார். தொடர்ந்து பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்ட அவர், டாப் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் அவசரப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
கடைசி வாய்ப்பு?
இனி சஞ்சு சாம்சனுக்கு கடைசி டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது இதுவே அவரின் கடைசிப் போட்டியா? என கேட்டும், அவரது பொறுப்பற்ற ஆட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர் ரசிகர்கள். கேப்டன் கோலி என்ன முடிவு எடுக்கப் போகிறார்?