இந்தியா படுதோல்வி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரில் வைட்வாஷ் ஆனது. நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்திய அணி இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கடும் விமர்சனம்
இந்திய அணியின் பேட்டிங் தான் இந்த தொடரின் படு தோல்விக்கு முக்கிய காரணம். அதனால், ஒவ்வொரு முக்கிய பேட்ஸ்மேனையும் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் மிக மோசமாக ஆடியவர் கேப்டன் விராட் கோலி தான்.
கோலி செயல்பாடு
அவர் இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. அவர் பேட்டிங் செய்த நான்கு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது தான் ஒரு டெஸ்ட் தொடரில் கோலியின் மிக மோசமான செயல்பாடு என கூறப்படுகிறது.
பார்ம் அவுட் ஆனாரா?
பலரும் விராட் கோலி பார்ம் அவுட் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர். நியூசிலாந்து சுற்றுப்பயணம் முழுவதிலும் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். மேலும், 11 இன்னிங்க்ஸ்களில் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மறுத்த கோலி
முதல் டெஸ்ட் முடிவில் கோலி பார்ம் அவுட் ஆனது பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த கோலி, தன் நன்றாக பேட்டிங் செய்து வருவதாகவும், அது ரன்களாக மாறவில்லை என்று கூறி சமாளித்து இருந்தார். ஆனால், இரண்டாவது போட்டியிலும் அவர் சொதப்பவே, மீண்டும் விமர்சனம் எழுந்துள்ளது.
ஷமி அதிகம்
இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலியை விட, பந்துவீச்சாளர் முகமது ஷமி அதிக ரன்கள் எடுத்துள்ளார். ஷமி பொதுவாக அதிக ரன்கள் குவிப்பவர் அல்ல. 10 அல்லது 11வது இடத்தில் தான் பேட்டிங் செய்து வருகிறார். அவர் இந்த டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்க்ஸ்களில் 44 ரன்கள் எடுத்துள்ளார்.
மற்ற பேட்ஸ்மேன்கள்
ஷமி உட்பட, கோலியை விட ஏழு இந்திய வீரர்கள் அதிகமாக ரன் எடுத்துள்ளனர். மயங்க் அகர்வால் 102, புஜாரா 100, ப்ரித்வி ஷா 98, ரஹானே 91, ஹனுமா விஹாரி 86, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்துள்ளனர். கோலி 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர்
அதே போல, இந்திய அணியின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பதே 58 தான். மயங்க் அகர்வால் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸில் எடுத்து இருந்தார். கோலி அதே இன்னிங்க்ஸில் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார்.
ட்ரென்ட் பவுல்ட் கூட அதிகம்
இந்திய பந்துவீச்சாளர் ஷமி மட்டுமில்லாமல், நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் 39 ரன்கள் எடுத்து, இந்த தொடரில் விராட் கோலியை விட அதிக ரன்கள் எடுத்துள்ளார். அவர் 11ஆம் வரிசையில் தான் களமிறங்கி வருகிறார். அவர் முதல் டெஸ்டில் ஒரே இன்னிங்க்ஸில் அதிரடியாக 38 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய அவமானம்
பத்தாம் வரிசை, பதினோராம் வரிசை வீரர்கள் விராட் கோலியை விட அதிக ரன்கள் எடுத்து இருப்பது கடும் எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளது. சிலர் இதை கிண்டல் செய்தாலும், பலரும் இது பெரிய அவமானம் என குறிப்பிட்டு வருகின்றனர். சீக்கிரம் பார்முக்கு வாங்க கேப்டன்!!