விராட், ரோஹித் இல்லை
ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆடவில்லை. கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, இந்திய அணியின் பந்துவீச்சின் போது காயம் காரணமாக களத்திற்கே வரவில்லை.
பும்ரா அபாரம்
எனினும், இளம் இந்திய வீரர்கள் கொண்ட அணி, வெற்றியை நோக்கி வேகமாக சென்ற நியூசிலாந்து அணியை தடுத்து வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தான். அவரது கட்டுக்கோப்பான பந்துவீச்சு தான் அணியைக் காப்பாற்றியது.
இந்தியா பேட்டிங்
இந்தியா பேட்டிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 163 ரன்கள் குவித்தது. 9 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி 3 விக்கெட்கள் இழந்து சற்றே நிதானமாக ரன் குவித்து வந்தது. ஆனால், சிவம் துபே வீசிய 10வது ஓவரில் போட்டி தலைகீழாக மாறியது.
மோசமான ஓவர்
அந்த ஓவரில் நான்கு சிக்ஸ், இரண்டு ஃபோர், ஒரு நோ பால் என ரன்கள் வாரி இறைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர்கள் செய்பர்ட் மற்றும் அனுபவ ராஸ் டெய்லர் அதிரடி ஆட்டம் ஆடி அந்த ஓவரில் மட்டும் 34 ரன்கள் குவித்தனர்.
பும்ரா கொடுத்த அழுத்தம்
அதன் பின் போட்டி நியூசிலாந்து அணிக்கு சாதகமாக செல்லும் என அனைவரும் கருதிய நிலையில், 12வது ஓவரில் பும்ராவிடம் பந்தை கொடுத்தார் தற்காலிக கேப்டன் ராகுல். பும்ரா அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தினார்.
நியூசிலாந்து சரிவு
அதனால், அடுத்த ஓவரில் அடித்து ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட செய்பர்ட் கேட்ச் கொடுத்து சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நியூசிலாந்து அணி விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 116 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 133 ரன்களுக்கு 8 விக்கெட்கள் என்ற நிலையை அடைந்தது.
முக்கிய காரணம் பும்ரா
இந்தப் போட்டியில் பும்ரா மிக குறைவான ரன்கள் கொடுத்து நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்படுத்தியதே இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். மேலும், பும்ரா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார்.
ஷோயப் அக்தர் பாராட்டு
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி தன் யூடியூப் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பும்ராவின் "பவுலிங் அட்டாக்" குறித்து பாராட்டி பேசி உள்ளார் ஷோயப் அக்தர்.
கிளாசான வீரர்
அக்தர் கூறுகையில், "பும்ரா கிளாசான வீரர். அவர் மீண்டும் தன் முழு பார்முக்கு திரும்ப 2 அல்லது 3 போட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார். சில பந்துவீச்சாளர்கள் காயத்தில் இருந்து மீண்டு வரும் போது தங்கள் இஷ்டம் போல நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்" என குறிப்பிட்டு பும்ரா காயத்தில் இருந்து மீண்டு, தன் பார்முக்கு திரும்பியதை பாராட்டினார்.
எக்ஸ் - ஃபேக்டர்
மேலும், அக்தர் கூறுகையில், "அவர் இரண்டு தொடர்களை எடுத்துக் கொண்டார். ஆனால், இந்தப் போட்டியில் அபாரமாக ஆடினார். 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தது மிக அற்புதமானது. பும்ரா இறுதி ஓவர்களில் 25 - 30 ரன்களை எடுக்க விட மாட்டார். நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர் ஆகியோரும் சிறப்பகாவே பந்து வீசினர். ஆனால், பும்ரா தான் இந்திய அணியின் "எக்ஸ் - ஃபேக்டர்" என நான் நினைக்கிறேன்" என்று கூறி பும்ராவை பாராட்டினார் ஷோயப் அக்தர்.