டி20 தொடர் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா முதலில் ஆடியது. அந்த தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று, 5 - 0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 வரலாற்றில் அது சாதனையாகவும் மாறியது.
அக்தர் பாராட்டு
அப்போது ஷோயப் அக்தர் இந்திய அணியை பாராட்டி பல வீடியோக்களை தன் யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நியூசிலாந்து அணி போல தானே விக்கெட்டை பறிகொடுக்கும் அணி இல்லை என அந்த அணியை அப்போது விமர்சித்து இருந்தார்.
முதல் ஒருநாள் போட்டி
அடுத்து, இந்திய அணி ஒருநாள் தொடரில் நியூசிலாந்துஅணியை எதிர்த்து ஆடியது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 347 ரன்கள் குவித்தும், நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டி
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியை 197 ரன்களுக்கு 8 விக்கெட்கள் என கட்டுப்படுத்தி, பின் 273 ரன்கள் வரை குவிக்க விட்டது.
இந்தியா தோல்வி
பின் சேஸிங்கில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இந்திய அணி 251 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என இழந்துள்ளது.
அக்தர் விமர்சனம்
இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வியை விமர்சித்து இருக்கிறார் ஷோயப் அக்தர். அவர் கூறுகையில், இந்திய அணிக்கு இந்த பாடம் தேவை தான் என்று குத்திக் காட்டி இருக்கும் அவர், அணியில் விக்கெட் எடுக்கும் ஸ்ட்ரைக் பவுலர் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
நல்லா வேணும்
அக்தர் தன் வீடியோவில் கூறுகையில், "இந்தியாவுக்கு இந்த பாடம் தேவை தான். இப்படி மோசமாக ஆடினால், உங்களால் ஒருநாள் போட்டிகளை வெல்ல முடியாது" என நேரடியாக தாக்கிப் பேசி இருக்கிறார். மேலும், அணியின் குறையை பற்றி பேசினார்.
ஸ்ட்ரைக் பவுலர் இல்லை
"டெய்லர் ஆட்டத்துக்கு யாரிடமும் பதில் இல்லை. எதிரணியை 7 - 8 விக்கெட்கள் வீழ்த்திய பின் எப்படி போட்டியை நழுவ விடுவீர்கள் என எனக்கு புரியவில்லை. நான் மீண்டும்., மீண்டும் சொல்கிறேன், இந்திய அணியில் ஸ்ட்ரைக் பவுலர் இல்லை" என்றார் அக்தர்.
நியூசிலாந்து அபாரம்
"இந்தியா இன்று சராசரியான அணியாக காட்சி அளித்தது. டி20 தொடரில் 5 - 0 என தோற்று மீண்டு வந்த நியூசிலாந்து அணியை பாராட்ட வேண்டும். இது போன்ற தோல்வி எந்த அணியையும் துவள வைக்கும். ஆனால், அவர்கள் அதிரடியாக மீண்டு வந்தார்கள்" என்று நியூசிலாந்து அணியை பாராட்டினார் அக்தர்.
இந்தியா செய்த தவறு
இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளரான ஷமியை நீக்கியது. அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் ஆடினார். சைனி விக்கெட் எடுக்காவிட்டாலும் காட்டுக் கோப்பாக பந்து வீசினார். ஆனால், பலரும் ஷர்துல் தாக்குரை நீக்கி விட்டு, சைனி இடம் பெறுவார் என்றே எதிர்பார்த்தனர். ஷமியை நீக்கியது பெரும் பின்னடைவாக அமைந்தது.