டெஸ்ட் தொடர்
இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் டி20 தொடரை வென்றாலும், ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்தது. எனவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமான இந்த டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரோஹித் சர்மா இல்லை
இந்திய அணியில் பெரிய பிரச்சனையாக இருப்பது துவக்க வீரர்களாக களமிறங்கப் போவது யார் என்பது தான். துவக்க வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு மாற்றாக இந்திய அணியில் இரு வீரர்கள் உள்ளனர்.
அணியில் குழப்பம்
சமீப காலமாக சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் நிச்சயம் அணியில் துவக்க வீரராக இடம் பெற உள்ளார். மற்றொரு துவக்க வீரராக களமிறங்க ப்ரித்வி ஷா - ஷுப்மன் கில் இடையே போட்டி இருந்தது. இருவரில் யாரை கேப்டன் கோலி தேர்வு செய்வார் என்பதில் குழப்பம் இருந்தது.
ஷுப்மன் கில் நிலை
ஷுப்மன் கில் சில நாட்களாக நியூசிலாந்து மண்ணில், இந்திய ஏ அணி சார்பாக ஆடிய போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து இருந்தார். இரண்டு அரைசதம், ஒரு சதம் ஒரு இரட்டை சதம் என மிரட்டலான பார்மில் இருந்தார். எனினும், இவருக்கு சர்வதேச அனுபவம் இல்லை.
ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு
ப்ரித்வி ஷா ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய அனுபவம் உள்ளவர். அறிமுக போட்டியிலேயே சதமும் அடித்தார். பின் அணியில் பங்கேற்கும் வாய்ப்பின்றி இருந்த அவர், ரோஹித் சர்மா அணியில் இடம் பெறாததால், மீண்டும் அணியில் தன் இடத்தை பெற காத்திருந்தார்.
பயிற்சிப் போட்டி
இந்த நிலையில், ப்ரித்வி ஷா - ஷுப்மன் கில் இடையே யாரை தேர்வு செய்வது என்பதை நிர்ணயிக்கும் களமாக மாறியது இந்தியா - நியூசிலாந்து லெவன் இடையே ஆன பயிற்சிப் போட்டி. இதில் தான் சொதப்பி இருக்கிறார் ஷுப்மன் கில்.
இருவரும் சொதப்பல்
பயிற்சிப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் இருவரும் டக் அவுட் ஆகி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பதை காட்டினர். இது இந்திய அணி நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
இரண்டாம் இன்னிங்க்ஸ்
எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் ப்ரித்வி ஷா ஓரளவு தாக்குப் பிடித்து ஆடி 39 ரன்கள் எடுத்தார். இந்த முறை ஷுப்மன் கில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன் மூலம் ப்ரித்வி ஷா ஒரு படி முன்னே சென்றார்.
கோலி முடிவு என்ன?
இந்தியா ஏ அணி சார்பாக ஆடிய போட்டிகளில் கில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு இருந்தாலும், ப்ரித்வி ஷா சர்வதேச போட்டிகளில் அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கே கேப்டன் கோலி தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார் என கூறப்படுகிறது.
முதல் டெஸ்ட்
முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21 அன்று துவங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் ஆடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இதுவாகும். இதில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றால் முதல் இடத்தை தக்க வைக்க முடியும்.