இந்தியா வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கை மீறிச் சென்ற போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் அசத்தல் ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் எளிதாக கைப்பற்றியது இந்திய அணி.
பொறுப்பான ஆட்டம்
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் பொறுப்பாக ஆடினார். 40 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். ராகுல் 27, விராட் கோலி 38 ரன்கள் எடுத்தனர்.
வில்லியம்சன் அபாரம்
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்து இருந்தது. நியூசிலாந்து அணி 180 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அபார ஆட்டம் ஆடி 95 ரன்கள் சேர்த்தார்.
போட்டி டை ஆனது
எனினும், நியூசிலாந்து அணி 20வது ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 8 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை டை செய்தது. முகமது ஷமி தன் அபார பந்து வீச்சால் 20வது ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்தி இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றியை தடுத்தார்.
முதல் சூப்பர் ஓவர்
அடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி இதுவரை டி20 போட்டி வரலாற்றில் சூப்பர் ஓவரில் ஆடியது இல்லை. 2007 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டை செய்து இருந்தது. ஆனால், அப்போது பவுல் அவுட் முறையில் தான் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
சூப்பர் ஓவர் வெற்றி
சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 17 ரன்கள் குவித்தது. தன் முதல் சூப்பர் ஓவரில், இந்திய அணி 20 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்து இலக்கை எட்டச் செய்தார்.
உலக சாதனை செய்த இந்தியா
இந்திய அணி தன் சூப்பர் ஓவர் வெற்றியில் உலக சாதனை ஒன்றையும் செய்துள்ளது. சூப்பர் ஓவரில் சேஸிங் செய்த அணிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
முதல் ரன் எடுத்த ரோஹித் சர்மா
அதே போல, டி20 போட்டிகளில் நான்காவது முறையாக சூப்பர் ஓவரில் பங்கேற்ற ரோஹித் சர்மா, சூப்பர் ஓவரில் தன் முதல் ரன்களை இந்தப் போட்டியில் தான் எடுத்தார். இதற்கு முன் பங்கேற்ற மூன்று சூப்பர் ஓவர்களில் அவருக்கு ரன் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரன் அவுட் ஆனார்
இந்தியா ஏ அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் இரு முறையும் ரோஹித் சர்மா சூப்பர் ஓவரில் பங்கேற்றுள்ளார். இந்தியா ஏ அணிக்காக ஆடிய போது ஒரு பந்தை சந்தித்து இருந்த ரோஹித், ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
ஐபிஎல் போட்டிகளில் ஆடிய சூப்பர் ஓவர்களில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து சாதித்தார் ரோஹித்.