இரண்டாவது டெஸ்ட் போட்டி
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன முதல் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது போட்டியில் ஆடியது இந்திய அணி. முதல் போட்டியில் மோசமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய நினைத்தது இந்திய அணி.
முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்
முதல் இன்னிங்க்ஸில் ஒரளவு சிறப்பாகவே ரன் எடுத்தது இந்திய அணி. மூன்று வீரர்கள் அரைசதம் அடிக்கவே இந்திய அணி 242 ரன்கள் சேர்த்தது. ரன் எடுத்தாலும், இந்திய வீரர்கள் முதல் போட்டி போலவே பவுன்ஸ் பந்துகளை சந்திக்க முடியாமல் திணறினர்.
குறைந்த முன்னிலை
அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி இடையே விக்கெட்களை இழந்தது. எனினும், கடைசி நேரத்தில் பின் வரிசை வீரர் ஜேமிசன் 49 ரன்கள் சேர்க்க, அந்த அணி 235 ரன்கள் சேர்த்தது. இந்தியா 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.
— faceplatter49 (@faceplatter49) March 2, 2020 |
இந்தியா சறுக்கல்
பின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியா 200 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், இரண்டாம் நாள் முடிவில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. பின் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
விக்கெட் வேண்டும்
நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும் என்றால் துவக்கத்திலேயே விக்கெட்களை சாய்க்க வேண்டும் என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸில் பந்து வீசியது இந்திய அணி. முதல் 3 ஓவர்களில் விக்கெட் விழவில்லை.
இரண்டு என கத்திய வீரர்
இந்த நிலையில், நான்காவது ஓவரில் நியூசிலாந்து துவக்க வீரர்கள் ஒரு ரன் ஓடிக் கொண்டு இருந்த போது, இந்திய பீல்டர் ஒருவர் "இரண்டு" என சத்தமாக கத்தினார். அதாவது, இரண்டு ரன்கள் ஓட வேண்டும் என ஒரு நியூசிலாந்து வீரர் கூறுவது போல, அவர் அப்படிக் கூறி, நியூசிலாந்து வீரர்கள் இடையே குழப்பம் ஏற்படுத்த முயன்றார். .
அம்பயர் எச்சரிக்கை
அதைக் கண்ட அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ, உடனடியாக இந்திய கேப்டன் விராட் கோலியை அழைத்து, "இரண்டு" என கத்தக் கூடாது என்றார். அதற்கு கோலி மறுப்பு கூறவே, அம்பயர் மீண்டும் ஒரு முறை. "நீங்கள் இரண்டு என கத்தினீர்கள்" என உறுதியாகக் கூறினார்.
கோலி சமாளிப்பு
பின் கோலி சமாளிக்கும் வகையில், அந்த வீரர் பைன் லெக் திசையில் இருந்த பீல்டரை எச்சரிக்கும் வகையில், நியூசிலாந்து வீரர்கள் இரண்டு ரன்கள் ஓடக் கூடும் என்று தான் கூறினார் என்றார். அதை மறுத்த அம்பயர். "நீங்கள் அப்படி சொல்லவில்லை. நீங்கள் இங்கே தான் கத்தினீர்கள்" என கூறி கோலியை எச்சரித்தார்.
3 விக்கெட் எடுத்த இந்தியா
பின்னர் இந்திய அணி 3 விக்கெட் எடுத்தது. உமேஷ் யாதவ் 1, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தி, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மற்றொரு தோல்வியை தவிர்த்தனர். எனினும், இந்த தோல்வி மூலம் இந்திய அணி 2011க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது.