இரண்டாவது டெஸ்ட் நிலை
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 0 - 1 என பின் தங்கி உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.
அமைதியான கோலி
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கோலி தன் வழக்கமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லை. அமைதியாகவே காணப்பட்டார். அதுதான் இந்திய அணியின் செயல்பாடுகள் மந்தமாக இருக்க காரணம் என சிலர் கூறினர். அதை இரண்டாவது போட்டியின் பந்துவீச்சின் போது மாற்றினார் அவர்.
இந்தியா பேட்டிங்
ஆனால், பேட்டிங்கில் இந்தியா அதே பழைய பல்லவியில் சடசடவென விக்கெட்களை இழந்து முதல் இன்னிங்க்ஸில் 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோலி முதல் போட்டி போலவே, இந்தப் போட்டியிலும் 3 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.
பந்துவீச்சு அபாரம்
எனினும், அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. பும்ரா 3, ஷமி 4 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியை 235 ரன்களுக்கு வீழ்த்தியது இந்திய அணி. முதல் இன்னிங்க்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது.
கோலி ஆக்ரோஷம்
இந்திய அணியின் பந்துவீச்சின் போது கேப்டன் கோலி ஆக்ரோஷமாக காணப்பட்டார். கத்தி கூச்சல் போட்டும், கெட்ட வார்த்தைகளில் திட்டியும் தன் பழைய வேகத்தை களத்தில் காட்டினார். அது இந்திய அணியின் செயல்பாட்டிலும் பிரதிபலித்தது.
|
கேன் வில்லியம்சன் விக்கெட்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்த போது கோலி தன் உச்சகட்ட ஆக்ரோஷத்தை காட்டினார். எகிறி குதித்து விக்கெட் வேட்டையை கொண்டாடிய அவர், வில்லியம்சனை நோக்கி கெட்ட வார்த்தையில் திட்டினார்.
|
ஹென்றி நிக்கோல்ஸ் விக்கெட்
அடுத்து ஹென்றி நிக்கோல்ஸ் கொடுத்த கேட்ச்சை இரண்டாவது ஸ்லிப்பில் நின்று இருந்த கோலி பிடித்தார். அதன் பின் ரசிகர்களை பார்த்து வாயில் விரல் வைத்து, அமைதியாக இருக்கும் படி எச்சரித்து, ஆங்கிலத்தில் (ஷட் தி *** அப்) என மோசமாக திட்டினார்.
|
தடை விதிக்க வாய்ப்பு
சமீப காலமாக ஐசிசி களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் வீரர்களுக்கு தடைப் புள்ளிகள் வழங்கி வருகிறது. இந்தப் போட்டிக்கு பின் கோலிக்கு தடை விதித்தாலும் விதிக்கலாம் என கூறப்படுகிறது.