டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால், இதில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற இரு அணிகளும் திட்டமிட்டன.
அதிர்ச்சி
முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய கடினமான வெல்லிங்டன் ஆடுகளத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இளம் வீரர்கள் மட்டுமின்றி அனுபவ வீரர்கள் புஜாரா, கோலி போன்றோர் கூட சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இந்தியா ஸ்கோர்
துணை கேப்டன் ரஹானே மட்டுமே சிறிது தாக்குப்பிடித்து ஆடி 46 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி கடைசி நேரத்தில் 21 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 150 ரன்களை கடந்தது. 68.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது இந்திய அணி.
வெற்றி வாய்ப்பு?
இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்க்ஸில் 250 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற ஓரளவு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இந்திய அணி தட்டுத் தடுமாறி 165 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியை மீட்க வாய்ப்பு இருந்தது.
நியூசிலாந்து ரன் குவிப்பு
நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்க்ஸில் 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால், இந்தியா சிறப்பான இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடி இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், அதிலும் சொதப்பியது இந்திய அணி. நியூசிலாந்து அணி எளிதாக ரன் குவித்தது.
ரிவ்யூவை வீணடித்தார் கோலி
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியது ஒரு பக்கம் என்றால், முதல் இன்னிங்க்ஸின் துவக்கத்திலேயே ரிவ்யூவை வீணடித்தார் கேப்டன் கோலி.
ஏழாவது ஓவர்
இந்தியா அணியின் பந்துவீச்சின் போது ஏழாவது ஓவரை வீசினார் பும்ரா. அந்த ஓவரின் மூன்றாவது பந்தை நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டல் சந்தித்தார். அப்போது அந்த பந்தை அவர் அடிக்க முயன்று தோல்வி அடைந்தார்.
எல்பிடபுள்யூ அவுட்?
பந்து அவரது காலில் பட்டது போல இருக்கவே கேப்டன் கோலி உட்பட அனைவரும் எல்பிடபுள்யூ அவுட் கேட்டனர். ஆனால், அம்பயர் மறுக்கவே. கோலி ரிவ்யூ கேட்பது குறித்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்டார். பின் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டு சைகை காட்டினார்.
இன்சைட் எட்ஜ் ஆனது
பின் காட்டப்பட்ட ரீப்ளேவில் பந்து பெரிதாக இன்சைட் எட்ஜ் ஆவது தெரிந்தது. அதே போல, பந்து பேட்டில் படும் சத்தம் தெளிவாக கேட்டது. இதை விக்கெட் கீப்பர் பண்ட் அறிந்து இருக்கலாம். அவரும், கோலியிடம் இது குறித்து கூறவில்லை.
மோசமான ரிவ்யூ
அதனால், இந்தியா ரிவ்யூவை இன்னிங்க்ஸின் துவக்கத்திலேயே இழந்து அதிர்ச்சி அளித்தது. அதுவும் மோசமான ரிவ்யூவாக அமைந்தது இது. கேப்டன் கோலியின் ரிவ்யூ கேட்கும் திறன் குறித்து மீண்டும் விமர்சனம் எழப் போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.