நியூசிலாந்து டெஸ்ட் போட்டி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஆடி வருகிறது. முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங்கில் ஓரளவு ரன் சேர்த்தது இந்தியா.
இந்தியா பேட்டிங்
டாஸ் வென்று நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. மயங்க் அகர்வால், கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
கோலி ஏமாற்றம்
குறிப்பாக முதல் இன்னிங்க்ஸில் 3 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. அவர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால், அவர் ஆட்டமிழந்தது கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.
கடும் விமர்சனம்
இந்திய வீரர்கள் ப்ரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.
நியூசிலாந்து பேட்டிங்
அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யத் துவங்கியது. அந்த அணி துவக்கத்தில் நன்றாக ஆடிய போதும் மத்தியில் விக்கெட்களை இழந்து 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டாம் லாதம் 52. கைல் ஜேமிசன் 49 ரன்கள் குவித்தனர்.
|
கேன் வில்லியம்சன் விக்கெட்
இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த போது கோலி உணர்ச்சிவசப்பட்டார். கத்தி கூச்சல் போட்ட அவர், கைகளால் சைகை செய்தும் விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார். வில்லியம்சனை பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
|
லாதம் விக்கெட்
அந்த சம்பவம் அதிர்ச்சி அளித்ததை அடுத்து, அரைசதம் அடித்த டாம் லாதம் ஷமியின் பந்துவீச்சில் பவுல்டு அவுட் ஆன போதும், வாயில் கை விரலை வைத்து சைகை செய்தார். கோலி உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுந்தது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலி செய்தது சரியா?
கோலி நியூசிலாந்து தொடரில் ஆக்ரோஷமாக செயல்படவில்லை. எனினும், தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த அவர், கடைசி டெஸ்ட் போட்டியில் தன் மொத்த கோபத்தையும் சேர்த்து வெளிக்காட்டி வருகிறார். அவரது இயல்பே இது தான் என்றாலும், இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது.
தடை விதிக்க வாய்ப்பு
ஐசிசி கடந்த சில மாதங்களில் எதிரணி வீரர்கள் ஆட்டமிழந்த போது உணர்ச்சிவசப்பட்டு, அதிகப்படியாக கொண்டாடிய தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு தடைப் புள்ளிகள் கொடுத்ததும், போட்டியில் ஆட தடை விதித்தும் உள்ளது.
|
ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்திய ரசிகர்கள் கோலியின் இந்த ஆக்ரோஷத்தை வரவேற்று இருக்கிறார்கள். கோலி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும், இப்படிப்பட்ட கேப்டன் கோலி தான் அணிக்கு தேவை எனவும் இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர்.