ஆளுக்கு ரெண்டு!
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித், தவான் பேட்டிங் ஆட வந்தோமே என ஆளுக்கு 2 ரன்கள் மட்டும் அடித்து விட்டு நடையைக் கட்டினர். சரி, கோலி, தோனி இருக்கிறார்கள் என மனதை தேற்றிக் கொண்டார்கள் ரசிகர்கள்.
ஒண்ணும் செய்யலை
அடுத்து ஐபிஎல்-இல் பட்டையைப் கிளப்பிய ராகுல், தனக்கு நான்காம் வரிசையில் பேட்டிங் செய்யக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்று பார்த்தால், "நான் ஒண்ணும் செய்யலை" என 6 ரன்களுடன் நடையைக் கட்டினார் அவர்.
ஸ்விங் பந்துவீச்சு
ரோஹித், தவான், ராகுல்.. இவர்கள் மூவரும் ஸ்விங் மன்னன் பவுல்ட் வீசிய அருமையான ஸ்விங் பந்துகளை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். "இங்கிலாந்து மண்"ணில் துவக்க ஓவர்களில் பந்து அதிகம் ஸ்விங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு
ராகுல் சென்ற உடன் தோனி ஐந்தாம் இடத்தில் பேட்டிங் ஆட வருவார் என்று பார்த்தால், ஹர்திக் பண்டியா களமிறங்கினார். அடடே.. ஒரு இளம் வீரருக்கு தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு என்று ரசிகர்கள் நினைத்ததற்கு ஏற்ப ஆடத் துவங்கினார் பண்டியா.
தலைசிறந்த பேட்ஸ்மேன்
ஆனால், 30 ரன்கள் எடுத்த அவர், தேவையே இல்லாமல் அடித்து ஆட ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையே, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி 18 ரன்கள் அடித்து இருந்த நிலையில் பௌல்டு அவுட் ஆனார்.
மறப்பதே நல்லது
அடுத்து தினேஷ் கார்த்திக் வெறும் 4 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை கனவை மறப்பதே நல்லது என்ற நிலையில் இருந்தது இந்தியா. அதாவது, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து இருந்தது.
டொக்கு
அடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டாலும், அதை மறக்காமல் "டொக்கு" வைத்து ஆடி அணியை காப்பாற்ற முயற்சி செய்த தோனி, 42 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 23 ஓவர்களில் 91 ரன்களுக்கு 7 விக்கெட் காலி.
மானம் காத்த ஜடேஜா
யாருமே ஒழுங்கா ரன் எடுக்கலைனா நான் ரன் எடுப்பேன் என்ற கொள்கை கொண்ட ஜடேஜா, இந்த முறையும் தன் கொள்கையில் இருந்து தவறவில்லை. 50 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து, இந்திய அணியின் மானம் காத்தார்.
சூப்பர் ஒத்துழைப்பு
குல்தீப் யாதவ் 36 பந்துகளை சந்தித்தும், புவனேஸ்வர் குமார் 17 பந்துகளை சந்தித்தும் ஜடேஜாவுக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இந்தியா ஒருவழியாக 179 ரன்கள் 39.2 ஓவர்கள் தாக்குப் பிடித்தது.
பகல் கனவு
இந்திய பேட்டிங் தள்ளாடியதை பார்த்து பாதி ரசிகர்கள், உலகக்கோப்பை கனவை கலைத்து விட்டு வேறு வேலை பார்க்கப் போய் விட்டார்கள். மீதி ரசிகர்கள், இந்தப் போட்டியில் வாங்கிய அடி.. இந்திய அணிக்கு புத்துணர்ச்சி ஊட்டி.. இந்தியா உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருக்கும் என்ற பகல் கனவுடன் தங்களை தாங்களே சமாதானம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.