இந்தியா தோல்வி
இந்தியா தன் முதல் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது வெறும் பயிற்சிப் போட்டி தான் என்றாலும், இந்திய வீரர்கள் கொஞ்சம் போராடித் தோற்று இருந்தால் ரசிகர்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள்.
அடித்து நொறுக்கப்பட்ட பில்டப்
ஆனால், இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியது, இதுவரை இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்லும் என கொடுக்கபட்ட பில்டப்'களை அடித்து நொறுக்கியது. சொல்லப் போனால் இந்த மோசமான தோல்வி இந்திய அணிக்கு சற்றே அவமானம்தான்.
இரண்டு வீரர்கள்
ஆனால், இந்தப் பயிற்சிப் போட்டியில் எதிர்பாராத ஆட்டம் ஆடிய ரவீந்திர ஜடேஜாவும், எதிர்பார்த்ததை விட மிக, மிக சிறப்பாக பந்து வீசிய பும்ராவும் மட்டுமே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றி உள்ளனர். இருவரும் என்ன செய்தார்கள்?
ஜடேஜா பேட்டிங்
கடந்த காலங்களில் ஜடேஜா பந்துவீச்சில் கில்லியாக இருந்தாலும், பேட்டிங்கில் பெரிதாக சாதித்ததில்லை. அவ்வப்போது ரன் எடுப்பார். பல சமயங்களில் சொதப்பிவிடுவார். ஆனால், நியூசிலாந்து போட்டியில் இந்திய அணியின் விக்கெட்கள் வேகமாக சரிந்து ஸ்கோர் 81க்கு 6 விக்கெட்கள் என அதலபாதாளத்தில் இருந்த போது, ஜடேஜா, அணியை ஓரளவு மீட்டார்.
அரைசதம்
ஜடேஜா களமிறங்கிய சில நிமிடங்களில் தோனி ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட்களுக்கு 91 ரன்கள். அப்போது ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமாரின் ஒத்துழைப்புடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அரைசதம் அடித்து அசத்தினார்.
நிம்மதி
பந்துவீச்சில் ஜடேஜா 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஓவருக்கு 3.86 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இது ஜடேஜா எப்போதும் செய்வது தான். ஆனால், பேட்டிங்கில் அவர் அடித்த அரைசதம் ரசிகர்களுக்கு நிம்மதி அளித்தது.
பும்ரா எடுத்த விக்கெட்
பும்ரா உலகக்கோப்பையில், இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதையும் தாண்டி பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை மிரட்டினார். தான் வீசிய 4வது பந்திலேயே மன்றோ விக்கெட்டை வீழ்த்தினார்.
மிரட்டல் பந்துவீச்சு
மொத்தமாக அவர் வீசிய 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்கள். மேலும், வெறும் 2 ரன்கள் தான் கொடுத்தார். அந்தளவு நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மார்டின் குப்டில், கேன் வில்லியம்சனை மிரட்டினார் பும்ரா.
ரசிகர்கள் நம்பிக்கை
இதே போல, உலகக்கோப்பை தொடரிலும் பும்ரா மற்ற அணிகளை மிரட்டுவார் என நம்பிக்கை பெற்றனர் ரசிகர்கள். இவர்கள் இருவர் தவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, தவான், கோலி, தோனி ஆகியோர் அணியை கை விட்டனர்.