லண்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா படுமோசமாக பேட்டிங் செய்து ரசிகர்களை வெறுப்பேற்றியது.
இந்தப் போட்டி நடைபெற்ற ஆடுகளம் துவக்கத்தில் ஸ்விங் பந்துகள் வீச ஏதுவாக இருந்தது. அதைப் பயன்படுத்தி நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் பவுல்ட் இந்திய அணியின் ரோஹித் சர்மா, தவான், ராகுல் ஆகியோரை வெளியேற்றினார்.
அடுத்து விராட் கோலி இருக்கிறார் என ரசிகர்கள் தெம்பாக இருந்த போது அவரும் இன்-ஸ்விங் ஆன பந்தை கணிக்கத் தவறி 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பௌல்டு அவுட் ஆனார்.
This is Virat Kohli for You
— SHEHROZ ♑ (@ShojiOye) May 25, 2019
india 39-4 #INDvNZ pic.twitter.com/WRR2u38G9s
மிதவேகப் பந்துவீச்சாளர் கோலின் டி கிராண்ட்ஹோம் கோலியின் விக்கெட்டை எளிதாக கைப்பற்றி அசத்தினார். விராட் கோலி பௌல்டு அவுட் ஆவது அரிது என்பதால், ரசிகர்கள் அவர் அவுட் ஆன விதத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோலி பந்தை கணிக்கத் தவறி, ஸ்டம்புகள் பறக்க ஆட்டமிழந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்தப் போட்டியில் ஜடேஜா 54, ஹர்திக் பண்டியா 30 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு ஆறுதல் அளித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பினர். இந்தியா 179 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், நியூசிலாந்து அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 67, ராஸ் டெய்லர் 71 ரன்கள் சேர்த்தனர்.