திணறும் இந்தியா
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
வானிலை மையம்
இந்நிலையில், நான்காம் நாளான இன்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்வதால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி, பிற்பகல் தாண்டியும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாலை 6 மணி தொடர்ந்து மழை பெய்ய 70 சதவிகிதத்திற்கும் மேல் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்காம் நாள் ஆட்டம்
இந்நிலையில், மீண்டும் போட்டியை தொடங்கும் வாய்ப்பில்லாத காரணத்தால், நான்காம் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் நாள் ஆட்டமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது நான்காவது நாள் ஆட்டமும் ரத்து செய்யபப்ட்டுள்ளது.
ரிசர்வ் டே காப்பாத்தணும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான்கு நாள் ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாளை ஐந்தாவது நாள் ஆட்டம் தொடர உள்ளது. அதேசமயம், வரும் ஜூன் 23ம் தேதி மாற்று நாள் (ரிசர்வ் டே) அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்னும் 2 நாட்களுக்கு இறுதிப் போட்டி நடக்கும் என தெரிகிறது. ஏற்கனவே, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய பவுலர்களிடமும் ஸ்விங் இல்லை. ஆகையால், அடுத்த 2 நாட்களில் இந்திய அணியால், எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே.