மாற்றம்
இந்திய அணியில் ஷிகர் தவான் காயமடைந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது தன் இடது கை பெரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்ட ராகுல், துவக்க வீரராக களமிறங்க உள்ளார். ராகுல் உண்மையில் துவக்க வீரர் தான். அந்த இடத்தில் தான் அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார் என்பதால், அது சரியான முடிவாக அமைந்தது. ஆனால், அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
விஜய் ஷங்கர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் விஜய் ஷங்கரை களமிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் போட்டியில் விஜய் ஷங்கர் தான் மிடில் ஆர்டரில் ராகுலுக்கு பதில் விளையாடுவார் என நம்பப்பட்டு வந்தது.
மழை
ஆனால், போட்டிக்கு முன்பே மழை வர வாய்ப்புள்ளது, அப்படி மழை வந்தால் நிலைமை மாறும் என்கிறார்கள். காரணம் இது தான், போட்டி துவங்க உள்ள முதல் இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு கூறுகிறது.
தினேஷ் கார்த்திக் வருவார்
சுமார் 75 நிமிடங்கள் போட்டி தடைபட்டால், அதன் பின், ஓவர்கள் குறைக்கப்படும். எனவே, மழை இரண்டு மணி நேரம் பெய்தால், அடுத்து ஒரு மணி நேரமாவது ஆடுகளத்தை தயார் செய்ய எடுத்துக் கொள்வார்கள். அப்படி நடந்தால், நிச்சயம் போட்டியின் ஓவர்கள் 40க்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், விஜய் ஷங்கரை நீக்கி விட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்ப்பார்கள் என்கிறார்கள்.
காரணம் என்ன?
அதற்கு முக்கிய காரணம், தினேஷ் கார்த்திக் டி20 போட்டி நிபுணர். போட்டியை வெற்றிகரமாக முடிக்க தனி பயிற்சிகள் மேற்கொண்டவர். அதை பல முறை இந்திய அணிக்காக ஆடி செய்தும் காட்டியுள்ளார். எனவே, அவரை தான் அணியில் எடுப்பார்கள்.