துவக்கம் அபாரம்
இந்தியா முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய போது ராகுல் நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். ரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். ராகுல் 57 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோலி, ரோஹித்துடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 30 ஓவர்களில் இந்தியா 172 ரன்களை எட்டியது. இதன் பின் தான் கோலியின் திட்டம் செயல்படத் தொடங்கியது.
சிங்கிள் ரன்கள்
30 ஓவர்களுக்குப் பின் ரோஹித் சர்மா தன் இயல்பில் ஆடினாலும் சிக்ஸ் அடிக்க முற்படவில்லை. கோலி தடுமாறாமல் குறைந்த அளவில் பவுண்டரி அடித்து வந்தார். தொடர்ந்து விக்கெட்கள் இடையே ரன் ஓடவே அவர் முயற்சி செய்தார்.
பண்டியா நிதானம்
ரோஹித் 140 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் ஹர்திக் பண்டியா தான் சந்தித்த 19 பந்துகளில் 2 ஃபோர், 1 சிக்ஸ் மட்டுமே அடித்தார். பண்டியா சற்றே நிதானித்து ஆடுவது தெரிந்தது. அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோனி 1 ரன்னில் வெளியேறினார்.
சிக்ஸ் அடிக்கவில்லை
கடைசி இரண்டு ஓவர்களை சந்தித்த விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் கூட ஆளுக்கு 1 ஃபோர் மட்டுமே அடித்தார்கள். இருவருமே சிக்ஸ் அடிக்கக் கூடியவர்கள் என்றாலும், சிக்ஸ் அடிக்க முயற்சி செய்யவில்லை. இந்திய அணி வீரர்களில் துவக்க வீரர்கள் தவிர்த்து யாருமே சிக்ஸ் அடிக்க முயற்சிக்கவில்லை, பண்டியாவின் அந்த 1 சிக்ஸ் தவிர. இது கோலியின் திட்டம் தான் என்கிறார்கள்.
கேட்ச் வாய்ப்பு
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த ஓல்ட் டிராபோர்டு மைதானம் மிகப் பெரிய மைதானம். அதனால், சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தால், பவுண்டரி எல்லை அருகே கேட்ச் பிடித்து விட வாய்ப்பு இருக்கிறது,
பெரிய மைதானம்
அதே சமயம், ஃபோர் அடிக்கவும், சிங்கிள் அடிக்கவும் இந்த பெரிய மைதானம் உதவும். பெரிய மைதானம் என்பதால் பீல்டர்கள் நெருக்கமாக இருக்க மாட்டார்கள். இடைவெளிகளில் பந்தை தட்டி விட்டால் பந்தை பிடிக்க பீல்டர்கள் அதிக தூரம் ஓடி வர வேண்டும்.
கோலியின் திட்டம்
இந்த விஷயங்களை சரியாக உள்வாங்கி தான் அப்படி ஆடியதோடு, மற்ற இந்திய வீரர்களையும் அதே வழியில் ஆட வைத்தார் கோலி. அதன் விளைவு, இந்தியா 336 ரன்களை எட்டியது. இடையே இந்திய வீரர்கள் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, கேட்ச் கொடுத்து வெளியேறி இருந்தால், இந்தியா கடைசி நேரத்தில் தடுமாறி இருக்கும். கோலியின் திட்டம் அதை காப்பாற்றி விட்டது.