காயம்
புவனேஸ்வர் குமார் துவக்கத்திலேயே காயமடைந்து வெளியேறிய போது இந்தியா வேகப் பந்துவீச்சை எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற கவலை இருந்தது. அவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு, போட்டியில் இனி பந்து வீச முடியாது என்ற நிலையில், அவர் இடத்தை நிரப்பினார் விஜய் ஷங்கர்.
கை கொடுத்த விஜய் ஷங்கர்
புவனேஸ்வர் குமார் 4 பந்துகள் வீசிய நிலையில் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை வீச வந்தார் விஜய். அவர் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் விக்கெட்டை எடுத்து ஆச்சரியம் அளித்தார். 5.2 ஓவர்கள் மட்டுமே வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் விஜய்.
பண்டியா அசத்தல்
அதே போல, ஹர்திக் பண்டியா பந்துவீச்சு உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக இல்லை என சிலர் கூறி வந்த நிலையில், அவரும் ஒரளவு கட்டுக்கோப்பாக வீசி, 2 விக்கெட்கள் எடுத்தார்.
தவான் காயம்
தவான் ஆஸ்திரேலியா போட்டியில் காயமடைந்து இருந்த நிலையில், அதுவும் இந்திய அணியில் கவலையை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அதற்கும் பதில் கிடைத்தது. ராகுல், தவான் இடத்தில் களமிறங்கி அசத்தினார்.
ராகுல் அசத்தல்
ராகுல், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அருமையான துவக்கம் அளித்து 57 ரன்கள் எடுத்தார். முதலில் நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கினாலும், விக்கெட் போகாமல் பார்த்துக் கொண்டார். கொஞ்சம் சுயநலமாக ஆடினாலும், அது அணிக்கு உதவியது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடியதும், ராகுல் நிதானம் காட்ட முக்கிய காரணம்.
பலமான அணி
ஆக, இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், தவான் என இரு முக்கிய, அனுபவ வீரர்கள் காயமடைந்தாலும், இந்திய அணி எங்கேயும் தடுமாறவில்லை. மேலும், பலமான அணியாக மாறி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரை துவங்கும் போது இருந்ததை காட்டிலும் இந்திய அணி வலுவாக உள்ளது. மற்ற அணிகளுக்கு மறைமுகமாக பயத்தை உண்டாக்கி உள்ளது இந்தியா.