இந்தியா - பாகிஸ்தான்
இந்தியாவில் மற்ற இந்தியா ஆடும் கிரிக்கெட் போட்டிகள் பார்க்காதவர்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள். குறைந்த பட்சம் சில நிமிடங்களாவது போட்டியை பார்த்து விடுவார்கள். முன்பெல்லாம், வார நாட்களில் போட்டி நடந்தால், அலுவலகத்துக்கு லீவு போட்டு விட்டு பார்ப்பவர்கள் எண்ணிக்கை அன்று மிக அதிகமாக இருக்கும். அதனாலேயே, இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
டிக்கெட் வாங்க போட்டி
இந்த முறை இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியின் டிக்கெட் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தது. 23,500 டிக்கெட்களை வாங்க சுமார் 7 லட்சம் மக்கள் விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது.
வரலாறு படைக்குமா?
அதை வைத்துப் பார்த்தாலே, இந்த உலகக்கோப்பை போட்டிக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது புரியும். இதை வைத்தும், சமீப காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதையும் வைத்து, இந்தப் போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வரலாறு படைக்கும் என கூறப்படுகிறது.
முந்தைய சாதனை என்ன?
இதற்கு முன் அதிக பார்வையாளர்களை பெற்ற போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி என நினைத்தால்.. அது இல்லை. இந்தியா - இலங்கை போட்டி. ஆம், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிய போட்டி தான் கிரிக்கெட் உலகில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட போட்டி.
எத்தனை பார்வையாளர்கள்?
இந்தியா - இலங்கை இறுதிப் போட்டியை சுமார் 55.8 கோடி மக்கள் பார்த்துள்ளார்கள். இரண்டாம் இடத்தில், அதே உலகக்கோப்பை தொடரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டி இடம் பெற்றுள்ளது. அந்தப் போட்டியை சுமார் 49.5 கோடி மக்கள் பார்த்துள்ளார்கள்.
எகிறிக் கிடக்கும் எதிர்பார்ப்பு
இந்த உலகக்கோப்பை தொடருக்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்தியா - இலங்கை போட்டியை விட அதிக மக்களை ஈர்க்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.
மழை வந்தால்?
ஆனால், அவரு மட்டும் வராம இருக்கணுமே என ரசிகர்கள், விளம்பர நிறுவனங்கள், தொலைக்காட்சி, முன்னாள் வீரர்கள் என அனைவருமே கவலையில் உள்ளனர். தற்போதைய நிலையின் படி இந்தப் போட்டியில் ஒரீரு முறையாவது மழை குறுக்கிடும் என கூறப்படுகிறது.