பரபரப்பான போட்டி
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஜூன் 16 அன்று நடைபெற உள்ளது. அது குறித்து இரண்டு நாட்களாக இரு தரப்பையும் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் தங்கள் நாட்டு அணி என்ன செய்யப் போகிறது என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பாகிஸ்தான் விளம்பரம்
பாகிஸ்தான் நாட்டில் உலகக்கோப்பை தொடரை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதை வைத்து, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு விளம்பரம் செய்தது. அது பெரும் சர்ச்சை ஆனது.
இந்தியா விளம்பரம்
இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு "பாகிஸ்தானின் அபு" ( பாகிஸ்தானின் தந்தை) என இந்திய அணியின் ஆடை அணிந்த ஒருவரை காட்டி, அவர் பாகிஸ்தான் அணியை சீண்டுவதை போல விளம்பரம் செய்து வருகிறது.
தந்தையர் தினம்
இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்த முறை தந்தையர் தினத்தில் நடக்கிறது. அதை வைத்து, இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்ற நாடு பாகிஸ்தான். அதனால், இந்தியா தான் தந்தை என்ற கோணத்தில் விளம்பரம் செய்து வருகிறது. இது தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை உசுப்பி விட்டுள்ளது.
பாகிஸ்தான் புகார்
இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசியிடம் இந்த விளம்பரம் குறித்து புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் என்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து கருத்து கூற மறுத்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் எஹ்சான் மானி.
தொடங்கி வைத்தது யார்?
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆரம்பம் 2015 உலகக்கோப்பை தான். ஆம், அந்த உலகக்கோப்பை தொடரில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி "மோக்கா, மோக்கா" என பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்து விளம்பரம் செய்தது. அப்போது சாதாரணமாக இருந்த விளம்பரம், தற்போது இரு நாடுகளிடையே சர்ச்சைகளை உண்டாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.