காயம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இடது கை பெரு விரலில் ஷிகர் தவான் காயமடைந்தார். அதனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. இதனால், உலகக்கோப்பை லீக் சுற்றின் முக்கிய போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
தேர்வுக் குழு - ரிஷப் பண்ட்
தவான் பல முக்கிய போட்டிகளில் விளையாட முடியாது என்றால் அவரை நீக்கி விட்டு ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என கூறியது இந்திய தேர்வுக் குழு. அவர்கள் உடனடியாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அழைத்தனர். அவரும் சென்று விட்டார்.
ரிஷப் பண்ட் நிலை?
ஆனால், ரிஷப் பண்ட் இந்திய உத்தேச அணியில் சேர்க்கப்படவில்லை. மாறாக தவான் பெயர் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளது. ஐசிசி விதிப்படி காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யலாம். ஆனால், காயமடைந்த வீரர் மீண்டும் அணியில் விளையாட முடியாது. அவரை நீக்கி விட வேண்டும். இங்கே தான் விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி தேர்வுக் குழுவை எதிர்க்கிறது.
காரணம் என்ன?
தேர்வுக் ககுழுவின் எண்ணப்படி ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றால், தவானை நீக்க வேண்டும். அவரை நீக்கி விட்டால், அவர் காயம் குணமான பின் மீண்டும் அணியில் சேர முடியாது. அப்போது வேறு வீரருக்கு காயம் ஏற்பட வேண்டும். அப்போது தான் தவான் அணியில் சேரலாம்.
தவான் முக்கியம்
லீக் சுற்றை விட அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு தான் தவான் முக்கியம் என கருதும் கோலி - சாஸ்திரி கூட்டணி, அவரை காயத்தோடு அணியில் வைத்து இருக்கலாம். ஒருவேளை அவர் காயம் லீக் சுற்று முடியும் வரை நீடித்தால், அதன் பின் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்கலாம் என நினைக்கிறது.
பரிசோதனை வேண்டாம்
ஆனால், உலகக்கோப்பை போன்ற தொடரில் பரிசோதனை முயற்சி செய்யக் கூடாது. தவான் காயம் குணமானாலும், அவர் மீண்டும் பழைய மாதிரி விளையாட முடியுமா? இரண்டு - மூன்று வாரத்தில் முழுமையாக குணமடைவாரா? என்று தெரியாமல் அவரை எப்படி அணியில் வைத்திருக்க முடியும் என்கிறது தேர்வுக் குழு.
கோலி - ரவி சாஸ்திரி காத்திருப்பு
ஆனால், விராட் கோலி - ரவி சாஸ்திரி இருவரும் தவான் அடுத்த இரண்டு வாரங்களில் முன்னேறி வருகிறாரா என பார்க்கலாம் என்ற முடிவில் உள்ளது. தவானுக்கு பதில் துவக்க வீரராக ராகுல் இறங்க உள்ளார். இந்த பிரச்சனைகள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பாதிக்காமல் இருக்க வேண்டும்!