மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி என்றால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறும் என்பதை மீண்டும் ஒருமுறை நாம் பார்த்து வருகிறோம்.
இங்கிலாந்தில் இந்திய பத்திரிக்கையாளர்கள் சிலர் காரில் சென்று கொண்டு இருந்த போது, அருகே மற்றொரு காரில் வந்து கொண்டிருந்த ஒருவர், கார் கண்ணாடியை இறக்கி, "உலகக்கோப்பை போனால் கூட பரவாயில்லை. ஆனால் நாளைக்கு ஜெயிச்சுடணும்.. அவங்க கிட்ட சொல்லுங்க" என இந்திய அணிக்கு பாகிஸ்தான் போட்டி குறித்து எச்சரிக்கை தகவல் சொல்லி அனுப்பிய சம்பவம் இன்று நடந்தது.
வீரர்கள் என்னதான் இது மற்றுமொரு போட்டி என தங்களுக்குள் சொல்லிக் கொண்டாலும், உள்ளே "இது பெரிய போட்டி.. எப்படியாவது வெல்ல வேண்டும்" என கேட்கும் இரைச்சலை எப்படி தடுக்க முடியும்? அது தான் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
ஆனால், விராட் கோலி இந்தப் போட்டிக்கு முன் பேட்டி அளித்த போது அமைதியாக காட்சி அளித்தார். அவரைப் பார்த்தால், இந்த தொடரின் மிகப் பெரிய போட்டி இன்னும் 24 மணி நேரத்திற்குள் தொடங்கப் போகிறது என்று யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால், இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்வதை காண சுமார் 100 கோடி மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் போட்டி குறித்து பேசிய கோலி, "நாங்கள் இங்கிலாந்துக்கு வந்தது முதல் எதுவும் வித்தியாசமாக விவாதம் செய்யவில்லை" என கூறினார். "எங்களை பொறுத்தவரை உங்கள் நாட்டுக்காக ஆடும் ஒவ்வொரு போட்டியும் உணர்ச்சிமிக்கது. அதனால், மற்ற போட்டியை விட ஒரு போட்டி மட்டுமே எங்களுக்கு அதிக முக்கியம் அல்ல" என்றார்.
"நாட்டுக்காக ஆடும் கிரிக்கெட் வீரராக எல்லா போட்டியையும் சமமாக பாவிக்க வேண்டியது எங்கள் கடமை. எந்த எதிரணி ஆடினாலும், நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் நாட்டுக்காக தான் ஆடுகிறோம். எங்கள் அறையில் எதுவும் வித்தியாசமாக இல்லை. எங்கள் மனநிலையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் உலகின் முன்னணி அணி. அதற்கு காரணம், நாங்கள் இதுவரை ஆடிய கிரிக்கெட். அதை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். அது தான் எங்கள் நோக்கம்" என்றார் கோலி.
மறுபுறம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பேசியதை வைத்துப் பார்த்தால், இந்தியாவிற்கு எதிரான போட்டியை முற்றிலும் வேறு வகையில் திட்டமிட்டு வருகிறது பாகிஸ்தான். "இது தான் விளையாட்டில் மிகப் பெரிய போட்டி என நான் சொல்ல விரும்பவில்லை. கால்பந்து இறுதிப் போட்டி 160 கோடி பார்வையாளர்களை ஈர்த்தது என்ற புள்ளிவிவரத்தை சமீபத்தில் பார்த்தேன். நாளை நமக்கு 150 கோடி வரை கிடைக்கலாம். அதற்கு மேல் இது பெரிதாக இருக்காது" என்றார் மிக்கி ஆர்தர்.
"நான் எனது வீரர்களிடம் நாளை நீங்கள் ஒரு ஹீரோவாக மாறலாம் என கூறி வருகிறேன். உங்கள் வாழ்க்கை நாளை தான் தீர்மானிக்கப்படப் போகிறது. நாளை நீங்கள் அட்டகாசமாக ஏதாவது செய்தால், எப்போதும் நினைவில் இருப்பீர்கள். நாளை அதற்கு ஒரு நம்ப முடியாத வாய்ப்பு இந்த வீரர்களுக்கு கிடைத்துள்ளது" என்றார் ஆர்தர்.
ஒருவர் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து சாதாரணமாக பேசுகிறார். மற்றொருவர், நாளை போட்டியின் புதிய பரிணாமங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து சிந்தித்து வருகிறார்.
கடைசியில் கோலி சொன்னது போல, ரசிகர்கள் மனநிலையும், வீரர்கள் மனநிலையும் வேறு என்பது தான் உண்மை. இது அந்த காரில் வந்த தகவல் சொன்ன ரசிகருக்கும் கேட்குமா?