இரண்டாவது டெஸ்ட் போட்டி
புனேவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா தவிர களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அரைசதம் அல்லது அதற்கும் மேல் தான் ரன் குவித்தனர்.
கோலி இரட்டை சதம்
அதிலும் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்தார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்து தன் இரண்டாவது சதம் கடந்தார். புஜாரா 58, ரஹானே 59, ஜடேஜா 91 ரன்கள் குவித்தனர்.
இமாலய ஸ்கோர்
இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்த இந்திய அணி இந்த முறை அதை விட அதிக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலாக விளங்கியது.
தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
தென்னாப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் துவக்கம் முதலே தடுமாறியது. 53 ரன்களில் 5 விக்கெட்களை இழந்தது அந்த அணி. உமேஷ் யாதவ், ஷமி முதல் ஐந்து விக்கெட்களையும் வீழ்த்தினர்.
டு ப்ளேசிஸ் போராட்டம்
கேப்டன் டு ப்ளேசிஸ் மட்டுமே போராடினார். அவர் 117 பந்துகளில் 64 ரன்கள் குவித்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா எப்படியும் 200 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி விடும். அப்படி செய்தால் 400 ரன்களுக்கும் மேல் இந்தியா முன்னிலை பெறலாம். அதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்து இந்தியா இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் கணக்கு போட்டனர்.
மகாராஜ் அரைசதம்
கேஷவ் மகாராஜ் தோள்பட்டையில் வலியுடன் பேட்டிங் ஆடினார். இருந்தாலும் நீண்ட நேரம் களத்தில் நின்ற அவர் அரைசதம் கடந்தார். 72 ரன்கள் வரை எடுத்து மிரட்டினார்.
போராடிய கோலி
மறுபுறம் பிலாண்டர் 192 பந்துகளை சந்தித்து 44 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய வீரர்களை வெயிலில் காய விட்டார். இவர்களை பிரிக்க முடியாமல் தவித்த கோலி பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தார். ஒருவழியாக அஸ்வின் பந்துவீச்சில் கேஷவ் மகாராஜ் 72, அவருக்கு பின் வந்த ரபாடா 2 ரன்களில் வீழ்ந்தனர்.
நான்காம் நாள் திட்டம்
மூன்றாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 272 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு இந்தியா பாலோ ஆன் கொடுத்துள்ளது.