கலக்கிய சீனியர்கள்
அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளை விளாசிய மாயங் அகர்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 85 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பொறுப்புடன் விளையாடிய ரஹானே, புஜாரா ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தது. வெளிநாட்டு மண்ணில் புஜாரா அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்தார். ,3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 100 ரன்களை கடந்த போது எல்லாம் இந்தியா தோல்வியை சந்தித்தது இல்லை
விஹாரி இன்னிங்ஸ்
ரிஷப் பண்ட் டக் அவுட்டாகியும், அஸ்வின் 16 ரன்களிலும் வெளியேற, இந்திய அணி தடுமாறியது. அப்போது பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் 24 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சர்களும் அடங்கும். 7 வது விக்கெட்டுக்கு ஷர்துல், விஹாரி ஜோடி 41 ரன்களை சேர்த்தது.பும்ரா 7 ரன்களில் பெவிலியன் திரும்ப, கடைசி வரை ஆட்டமிழக்காமல் விஹாரி 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நல்ல தொடக்கம்
இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி இன்னிங்சில் விளையாடி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ஏய்டன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் களமிறங்கிய பீட்டர்சன்னும் கட்டையை போட்டு வெறுப்பேற்ற, அஸ்வின் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
பாறையாக மாறிய எல்கார்
ஆனால் கேப்டன் டீன் எல்கார், ஒரு பாறையை போல் நின்று விளையாடி வருகிறார். இந்திய வீரர்களின் ஷாட் பால் பந்துவீச்சை உடம்பில் வாங்கி கொண்டு, அவுட்டாகாமல் நிற்கிறார்.121 பந்துகளை எதிர்கொண்ட எல்கார் 46 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு துணையாக வெண்டர்டுசன் நிற்கிறார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு கைவசம் 8 விக்கெட் இருக்க, வெற்றிக்கு மேலும் 122 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் எதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும்.