தோனிக்கு பின் வந்த சாஹா
இந்திய டெஸ்ட் அணியில் தோனி 2014இல் ஓய்வு பெற்ற பின் டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இடம் பெற்று வந்தார் விரிதிமான் சாஹா. அவர் அதிக அளவில் பேட்டிங்கில் ரன் குவிக்கவில்லை என்றாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
சாஹா காயம்
கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்டு வந்தார் சாஹா. அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனால், டெஸ்ட் அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர்.
ரிஷப் பண்ட் ஆட்டம்
இந்த நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெற்று தன்னை நிரூபித்தார். விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும், ரன் குவிப்பதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். இரண்டு சதங்கள் அடித்து இருந்தார்.
சொதப்பல் பார்ம்
எனினும், கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் மோசமாக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங்க்ம் பேட்டிங் இரண்டுமே அடி வாங்கியது. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் சொதப்பினார்.
மீண்டும் சாஹா
அதை அடுத்து ரிஷப் பண்ட் சரியான பார்மில் இல்லை என கூறப்பட்டு, டெஸ்ட் தொடரில் வெளியே அமர வைக்கப்பட்டார். காயம் குணமான பின் சுமார் ஓராண்டாக காத்திருந்த சாஹாவை, உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என கோலி பாராட்டி களமிறங்க வாய்ப்பு அளித்தார்.
சாஹா கலக்கல் கீப்பிங்
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் பங்கேற்றார். இந்த போட்டிகளில் மிகச் சிறப்பாக கீப்பிங் செய்த சாஹா, கேட்ச் பிடிப்பதில் பலரையும் ஈர்த்தார். அவர் பிடித்த சில கேட்ச்கள் மிக மிகக் கடினமானவை என்பதால் எளிதாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.
அனைவரும் பாராட்டு
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பிடித்த இரண்டு கேட்ச்கள் அற்புதமாக இருந்தது. பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கூட தன் இரண்டு விக்கெட்கள் சாஹாவுடையது. அவர் தான் பிடிக்க முடியாத கேட்ச்சை பிடித்து அதை விக்கெட்டாக மாற்றினார் என கூறி பாராட்டி இருந்தார்.
கங்குலி தலைவர் ஆனார்
சாஹா பற்றி எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டு இருக்கிறது. இதற்கிடையே கங்குலி பிசிசிஐ அமைப்பின் தலைவர் ஆனார். சாஹா நீண்ட காலம் கழித்து இந்தியா அணியில் நுழைந்தது, கங்குலி அடுத்த சில வாரங்களில் பிசிசிஐ தலைவர் ஆனதற்கும் சம்பந்தம் இருக்கிறதோ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எழும் சந்தேகம்
கங்குலி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். மேற்கு வங்க மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஆகவும் இருப்பவர். சாஹா அதே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இந்திய அணியில் தற்போது ஆடி வரும் ஒரே வீரர்.
கங்குலிக்காக கொடுத்த வாய்ப்பா?
கங்குலி பிசிசிஐ தலைவர் ஆக்குவதற்கு முன், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவருக்காக, மேற்கு வங்க வீரர் சாஹாவை இந்திய அணியில் சேர்த்திருக்கலாமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
சாஹா திறமையாளர் தான்
சாஹா திறமையாளர் என்பதில் சந்தேகமில்லை. ரிஷப் பண்ட் சரியாக ரன் குவிக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால், கங்குலி தலைவர் ஆகும் முன் மேற்கு வங்க வீரர் இந்திய அணியில் இடம் பெற்றது யதேச்சையாக நடந்தது தானா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.