மோசமான பேட்டிங்
தென்னாப்பிரிக்கா அணி இந்தப் போட்டியில் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 6 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், கிறிஸ் மோரிஸ் - ஆன்டைல் பெஹ்ளுக்வாயோ பேட்டிங் செய்து வந்தனர். பெஹ்ளுக்வாயோ மிக நிதானமாக ரன் சேர்த்து வந்தார்.
முன்னேறி வந்தார்
அப்போது 40வது ஓவரை வீசினார் சாஹல். அந்த ஓவரின் 3வது பந்தை பெஹ்ளுக்வாயோ எதிர்கொண்டார். சாஹல் வீசிய லெக் ஸ்பின் வந்த திசையை கணிக்கத் தவறிய அவர், முன்னேறி வந்து பந்தை அடிக்க முயன்றார்.
கடினம்
ஆனால், பந்து பிட்ச் ஆகி லெக் திசையில் அதிக தூரம் திசை மாறிச் சென்றது. தோனி பந்தை கணித்தாலும், பந்து அதிக தூரம் விலகிச் சென்றது. தோனி பந்தை பிடித்த இடத்தில் இருந்து, ஸ்டம்பிங் செய்வது சற்று கடினம்தான். அதற்குள் பேட்ஸ்மேன் சுதாரித்து, கிரீஸ்-க்குள் வந்துவிட வாய்ப்பு இருந்தது.
மின்னல் வேகம்
எனினும், தோனி மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஸ்டம்பிங் செய்தார். இதைத் தொடர்ந்து பெஹ்ளுக்வாயோ 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட் வீழ்ச்சி மூலம் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தி உள்ளார் தோனி.
சாதனை
லிஸ்ட் ஏ போட்டிகளில் (உள்ளூர் ஒருநாள் போட்டிகள் + சர்வதேச ஒருநாள் போட்டிகள்) தோனி இந்த ஸ்டம்பிங்குடன் சேர்த்து 139 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில் முதல் இடத்தை, பாகிஸ்தானின் மொயின் கானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் தோனி.
அபார பந்துவீச்சு
இந்தப் போட்டியில் சாஹல் 4, பும்ரா 2, புவனேஸ்வர் குமார் 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 227 ரன்கள் மட்டுமே சேர்த்தது.