அது என்ன கிளவுஸ்?
இந்தியா - தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை லீக் போட்டியில் தோனி அணிந்து இருந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸில் இந்திய ராணுவத்தின் "பாலிடான் முத்திரை" இடம் பெற்று இருந்தது. போட்டி துவங்கி சில மணி நேரம் வரை யாரும் இதை பார்க்கவில்லை.
ஸ்டம்பிங்
பின்னர், போட்டியில் 40வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் பெஹ்ளுக்வாயோவை தோனி ஸ்டம்பிங் செய்தார். அப்போது தோனி அணிந்து இருந்த கிளவுஸ் அருகே காட்டப்பட்டது. அதை பார்த்த சிலர் அதில் இடம் பெற்று இருந்த வித்தியாசமான முத்திரை ராணுவத்தை சேர்ந்தது என கண்டுபிடித்து, சமூக வலைதளங்களில் அந்த தகவலை பரப்பினார்கள்.
பாலிடான் முத்திரை
தொடர்ந்து அது பாராமிலிட்டரி பிரிவை சேர்ந்த பாலிடான் முத்திரை என்ற தகவலும் வெளியானது. அதிலும் குறிப்பாக பாராஷூட் பிரிவை சேர்ந்த முத்திரை அது. பாராமிலிட்டரி காமாண்டோக்கள் மட்டுமே அந்த முத்திரையை பயன்படுத்த முடியும்.
லெப்டினன்ட் கலோனல்
அப்புறம் எப்படி தோனி அதை பயன்படுத்தினார்? தோனி பாராஷூட் பிரிவின் கௌரவ லெப்டினன்ட் கலோனல் பதவியில் கடந்த 2011இல் நியமிக்கப்பட்டார். 2015இல் அதற்கான பயிற்சிகளிலும் கூட ஈடுபட்டுள்ளார் தோனி.
ரசிகர்கள் புகழ்ச்சி
இதையெல்லாம் கண்டுபிடித்த தோனி ரசிகர்கள், தோனி உலகக்கோப்பை தொடரில் அதை அணிந்து விளையாடுகிறார் என்றால் அவரது தேசப்பற்று எப்படிப்பட்டது என புகழ்ந்து தள்ளி வந்தார்கள். காட்டுத் தீ போல பரவிய இது தொடர்பான செய்திகள், வீடியோக்கள் ஐசிசி-க்கும் சென்று சேர்ந்துள்ளது.
இனிமேல் அணிய மாட்டார்
உடனடியாக ஐசிசி, பிசிசிஐக்கு வீரர்கள் யாரும் ராணுவ முத்திரை அணியக் கூடாது என கூறியுள்ளது. அதனால், தோனி அடுத்து வரும் போட்டிகளில் ராணுவ முத்திரை ஏதும் அணிய மாட்டார் என்றே தெரிகிறது.
ராணுவ தொப்பி விவகாரம்
ஏற்கனவே, ஒருநாள் போட்டி ஒன்றில் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். அப்போது அதை எதிர்த்து ஐசிசி-யிடம் புகார் அளித்தது பாகிஸ்தான் அணி. அது போன்ற சர்ச்சைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க, தற்போது ஐசிசி தானே தலையிட்டு, அந்த முத்திரையை நீக்குமாறு கூறியுள்ளது என கூறப்படுகிறது.