வெற்றி இலக்கு
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் டி காக் 52, பவுமா 49 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்களில் 149 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
தவான் - கோலி சேஸிங்
அடுத்து சேஸிங் செய்த இந்திய அணியில் ரோஹித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த தவான் - கோலி பொறுப்பாக ஆடினர். சிறப்பாக ஆடி வந்த தவான் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அந்த கேட்ச்
அவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார் டேவிட் மில்லர். 12வது ஓவரின் நான்காவது பந்தை ஷம்சி வீசினார். அந்த பந்தை லாங் ஆன் திசையில் அடித்தார் தவான். பந்து ஒரு பிட்ச் ஆகி பவுண்டரி செல்லும் என்ற நிலை.
சூப்பர்மேன் வேலை
அப்போது பவுண்டரி எல்லை அருகே பந்தை பிடிக்க பல அடி தூரம் ஓடி வந்த டேவிட் மில்லர், காலை உந்தி மேலே தாவி, பந்தை ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார். பந்து பவுண்டரி செல்லாமல் தடுப்பதே மிகவும் கடினமான அந்த சூழலில் பந்தை கேட்ச் பிடித்தார்.
இருவரும் கவனித்தனர்
ஷிகர் தவான், விராட் கோலி இருவரும் மேலே பறந்து பவுண்டரி அருகே சென்ற பந்தை கவனித்துக் கொண்டு இருந்தனர். இருவரும் மில்லர் பந்தை தவற விடுவார் என்று தான் நினைத்தனர்.
|
வாயை பிளந்த கோலி
ஆனால், சூப்பர்மேன் போல தாவி, காற்றில் பறந்து மில்லர் பிடித்த கேட்சை பார்த்து வாயை பிளந்து விட்டார் கோலி. அந்த காட்சியை வீடியோ எடுத்து பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது.
தென்னாப்பிரிக்கா தோல்வி
டேவிட் மில்லர் எத்தனை அற்புதமான கேட்ச் பிடித்தாலும் தென்னாப்பிரிக்கா அணி இறுதியில் தோல்வி அடைந்தது.விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தார். 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார் கோலி.
கோலி பிடித்த அந்த கேட்ச்
முன்னதாக இதே போட்டியில், டி காக் கொடுத்த கடினமான கேட்ச் ஒன்றை கோலி பறந்து வந்து பிடித்தார். அந்த காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அதை விட அசத்தலாக இருந்தது மில்லர் பிடித்த கேட்ச்.