ஐபிஎல் மாற்றம்
2019 ஐபிஎல் தொடருக்கு முன் தீபக் சாஹர் இந்திய அணிக்காக ஒரீரு போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஆனால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில், 2019 ஐபிஎல் தொடர் வரை முற்றிலுமாக மாற்றியது.
தோனியும், சிஎஸ்கேவும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் பல வெளிநாட்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் தொடரில் இருந்து பல்வேறு காரணங்களால் விலகினர். அப்போது பவர்பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீச சிறந்த வேகப் பந்துவீச்சாளர் தேவை.
தோனி அறிவுரைகள்
அப்போது தோனி தேர்வு செய்தவர் தான் தீபக் சாஹர். ஒரு குருவாக இருந்து தீபக் சாஹருக்கு சில நுணுக்கங்களை கற்றுத் தந்தார் தோனி. அது தீபக் சாஹரின் செயல்பாடுகளை மாற்றியது. சில அணுகுமுறைகளை மாற்றியது.
ஐபிஎல்-இல் கலக்கினார்
கடந்த 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். கட்டுக் கோப்பாகவும், விக்கெட் வீழ்த்தும் வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்தார். சிஎஸ்கே அணி இறுதிப் போட்டி வரை முன்னேற முக்கிய காரணங்களில், தீபக் சாஹரும் ஒருவர்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
சிறந்த ஐபிஎல் செயல்பாடுகள் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பை பெற்றுத் தந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே ஒரு டி20 போட்டியில் ஆடிய சாஹர், வெறும் 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி, எல்லோரையும் மிரள வைத்தார்.
தென்னாப்பிரிக்கா டி20
அடுத்து தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இடம் பெற்ற அவர் இரண்டாவது டி20 போட்டியில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பவர்பிளே ஓவர்களிலும், இறுதி ஓவர்களிலும் பந்து வீச சரியான ஆள் இவர் தான் என கேப்டன் கோலி நினைக்கும் அளவுக்கு சாதித்துக் காட்டி விட்டார் தீபக்.
சிறப்பு என்ன?
புதிய பந்திலும், பழைய பந்திலும் ஒரே மாதிரியான நீளத்தில் பந்து வீசுகிறார். மேலும், பேட்ஸ்மேன் கணிக்க முடியாத அளவுக்கு பந்துவீச்சு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார். இதை குறிப்பிட்டு முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பாராட்டி வருகின்றனர்.
முக்கிய பந்துவீச்சாளர்
பும்ரா, ஷமி இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என்ற இடத்தை பெற்றுள்ளார். 3வது டி20 போட்டியிலும் தீபக் சாஹர் முக்கிய வீரராக அணியில் இருப்பார் என கருதப்படுகிறது.