டாஸ் முடிவு
முதல் டெஸ்டில் இந்தியா டாஸ் வென்றது. கேப்டன் கோலி டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தார். அப்போதே தென்னாப்பிரிக்க அணி சோகமயமானது. அதற்கு முக்கிய காரணம், ஆடுகளம் மற்றும் முந்தைய வரலாறு.
ஆடுகளம் எப்படி?
முதல் டெஸ்ட் நடைபெறும் விசாகப்பட்டினம் ஆடுகளம் முதல் நாள் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்றும், அடுத்த நாட்களில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் எனவும் கருதப்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு
அதனால், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது, மேலும், நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் சேஸிங் செய்வது என்பது இந்த ஆடுகளத்தில் கடினமான ஒன்று.
முந்தைய டெஸ்ட் தொடர்
அது மட்டுமின்றி, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா கடைசியாக ஆடிய 2015 டெஸ்ட் தொடரின் நான்கு போட்டிகளிலும் அந்த அணி டாஸ் தோற்று இருந்தது. அந்த தொடரில் அந்த அணி 0 - 3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து இருந்தது.
கேப்டன் புலம்பல்
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் டாஸ் தோற்ற பின் அதை நினைத்து புலம்பினார். "இந்திய துணை கண்டத்தில் எங்கள் டாஸ் ராசி சிறப்பாக இல்லை" என வெளிப்படையாக கூறி புலம்பினார். மேலும், தன் வீரர்களை பார்த்து வெற்றுப் புன்னகை புரிந்து தன் கவலையை வெளிப்படுத்தினார்.
மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள்
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை சமாளிக்க மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது. எனினும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்திய அணி அசத்தல் துவக்கம் அளித்து, சாதனை புரிந்தது.
வெளுத்து வாங்கிய இந்தியா
இந்திய அணியின் துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்து மிரட்டியது. தென்னாப்பிரிக்க அணி இவர்களை பிரிக்க முடியாமல் தவித்தது. டாஸ் வெற்றியை சரியாக பயன்படுத்திய இந்திய அணி ரன் மழை பொழிந்தது.
இரண்டு சதம்
துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதித்தார் ரோஹித் சர்மா. அவர் ஒருநாள் போட்டி போல அதிரடியாக ஆடி, 244 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். மயாங்க் அகர்வால் தன் முதல் டெஸ்ட் சதம் கடந்தார்.
தடுமாறும் தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இந்திய அணி எப்படியும் முதல் இன்னிங்க்ஸில் 400 முதல் 500 ரன்கள் வரை எளிதாக குவிக்க முடியும் என்பதால், முதல் டெஸ்ட் தோல்வியை தவிர்க்க அந்த அணி போராட வேண்டிய நிலையில் உள்ளது.