ஒன்பது டாஸ் தோல்வி
ஆசிய கண்டத்தில் கேப்டனாக கடைசி ஒன்பது போட்டிகளில் டாஸ் தோற்று இருக்கிறார் பாப் டு ப்ளேசிஸ். அது போட்டியிலும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் தான் மனம் வெறுத்துப் போய் இருக்கிறார் அவர்.
இந்தியா டெஸ்ட் தொடர்
இந்திய அணிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் துவங்கும் முன்பே டாஸ் வெற்றி முக்கியம் என்பது பற்றி குறிப்பிட்டு இருந்தார் பாப் டு ப்ளேசிஸ்.
டாஸ் வென்றால்..
காரணம், இந்திய ஆடுகளங்களில் கடைசி இன்னிங்க்ஸ் ஆடி சேஸிங் செய்து வெற்றி பெறுவது என்பது நடக்காத காரியம். முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது தான் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் நிலை.
முதல் போட்டியில் டாஸ் தோல்வி
முதல் டெஸ்டில் டாஸில் தோற்ற டு ப்ளேசிஸ் முகம் அப்போதே சோர்ந்து போனது. அப்போதே அவருக்கு போட்டியின் முடிவு தெரிந்து விட்டது. அந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது.
இரண்டாம் போட்டியில்..
இரண்டாம் போட்டியிலும் இதே நிலை தான். இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து 601 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்து பரிதாபமாக டெஸ்ட் தொடரை இழந்தது.
மனம் துவண்டார்
இதனால், மனம் துவண்டு போய் இருக்கிறார் டு ப்ளேசிஸ். உலகக்கோப்பை தோல்விக்குப் பின் டி20 அணியின் கேப்டன் பதவியையும், அந்த அணியில் தன் இடத்தையும் இழந்த டு ப்ளேசிஸ் டெஸ்ட் அணியில் மட்டுமே கேப்டனாக இருக்கிறார். அதிலும் அடி மேல் அடி கிடைத்து வருவதால் சோர்ந்து போய் இருக்கிறார்.
வெற்றி அவசியம்
இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், அந்தப் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன். அதற்கு டாஸ் வெற்றி அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
என்ன சொன்னார் டு ப்ளேசிஸ்?
மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து சமீபத்தில் பேசிய அவர் தனக்கு பதிலாக வேறு ஒருவரை டாஸ் போடா அனுப்ப உள்ளதாக கூறி இருக்கிறார். தனக்கு டாஸ் ராசி இல்லை என்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
திட்டம் என்ன?
மூன்றாவது டெஸ்டுக்கான திட்டம் குறித்து பேசிய அவர், முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணி அதிக ரன்களை குவிக்க வேண்டும். அப்போது தான் போட்டியில் ஏதாவது செய்ய முடியும். இரண்டாவது இன்னிங்க்ஸில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
உண்மையா?
இந்த முடிவை டு ப்ளேசிஸ் நகைச்சுவையாக கூறினாரா? அல்லது உண்மையிலேயே இப்படி தான் செய்யப் போகிறாரா? என்பது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் தான் தெரிய வரும்.