முதல் டெஸ்ட் போட்டி
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்தது. அடுத்த ஆட வந்த தென்னாப்பிரிக்க அணி துவக்கத்தில் தடுமாறியது.
இரண்டு விக்கெட்
இரண்டாம் நாளின் இறுதியில் 20 ஓவர்கள் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்களை இழந்தது. அதில் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தியது அஸ்வின். இந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது.
மூன்றாம் நாள் போராட்டம்
தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்த நிலையில், பாப் டு ப்ளேசிஸ் - டீன் எல்கர் கூட்டணியின் அபார ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு வந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இவர்களை பிரிக்க போராடினர். அஸ்வினும் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார்.
கவாஸ்கர் கருத்து
இந்த நிலையில், போட்டியின் இடையே தொலைக்காட்சி நேரலையில் பேசிய முன்னாள் வீரர் கவாஸ்கர், அஸ்வின் அணியில் நிரந்தர வீரராக இருந்திருக்க வேண்டும் அவருக்கு போதிய நிம்மதியான சூழல் இல்லை என்பதால் தான் அவர் சற்றே தடுமாறி வருகிறார் என்றார்.
நம்பிக்கை முக்கியம்
சுற்றி இருக்கும் நபர்களின் நம்பிக்கையை நாம் பெற்றுவிட்டோம் என அவர் நினைக்க வேண்டும். அப்படி சுற்றி இருக்கும் நபர்களின் நம்பிக்கையை நாம் பெறாத போது, தொடர்ந்து முக்கிய இடத்தில் வைக்கப்படாமல், புறக்கணிக்கப்படும் போது, சற்றே அதிகப்படியாக முயற்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றார் கவாஸ்கர்.
ஒப்பிட்டு பார்க்கும் முறை
அஸ்வின் எப்போதும் ஒப்பிட்டு பார்க்கும் முறையால் பாதிக்கப்படுகிறார். ஆஸ்திரேலியாவில் ஆடும் போது அவரை நாதன் லியோனுடன் ஒப்பிட்டு பேசினார்கள். அவர் அதை செய்கிறார், இதை செய்கிறார் என்றார்கள்.
விக்கெட் வீழ்த்தவில்லை
ஆனால், நாதன் லியோன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசினார். அதே போல, இங்கிலாந்தில் மொயீன் அலி 6, 7 விக்கெட்கள் வீழ்த்தினார், நீங்கள் விக்கெட் வீழ்த்தவில்லை என்றார்கள். இது நடப்பது தான்!
அதிகமாக புறக்கணிக்கப்படுகிறார்
அஸ்வின் போன்ற சாதனை செய்து இருக்கும் ஒரு நபரை விட அவர் அதிகமாக புறக்கணிக்கப்படுகிறார். 350 விக்கெட்கள் எடுத்துள்ள ஒருவரை இந்தளவுக்கு புறக்கணிக்கக் கூடாது என்று இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக சாடினார் கவாஸ்கர்.
கோலி - ரவி சாஸ்திரி விமர்சனம்
கவாஸ்கர் கூறும் அனைத்தும், கேப்டன் விராட் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து தான். அவர்கள் பெயரை குறிப்பிடாமல் சரமாரியாக விளாசினார் கவாஸ்கர். நாதன் லியோன், மொயீன் அலி ஒப்பீடு செய்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது விமர்சித்ததும் ரவி சாஸ்திரி மற்றும் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.