டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் டாஸ் வென்றது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அப்போது பேசுகையில், கேப்டன் கோலி இந்திய அணியில் செய்துள்ள மாற்றம் பற்றி கூறினார்.
ஷாபாஸ் நதீம் அறிமுகம்
இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, சுழற் பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறினார் கோலி. நேற்று மாலை வரை ஷாபாஸ் நதீம் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில் இது அதிரடி மாற்றமாக இருந்தது.
ஏன் இந்த மாற்றம்?
மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்டு களமிறங்கி இருப்பதாக தெரிகிறது.
குல்தீப் யாதவ் என்ன ஆனார்?
ஆனால், ஏற்கனவே அணியில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் குல்தீப் யாதவ்வை விடுத்து, ஷாபாஸ் நதீமுக்கு ஏன் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு போட்டிக்கு முந்தைய நாள் மாலை நடந்த நாடகம் தான் காரணம்.
இரவு வந்த அறிவிப்பு
திடீர் என இரவு ஏழு மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ்வுக்கு பதில் ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்தது. குல்தீப் யாதவ் காயம் குணமாகாததால் இந்த மாற்றம் என அறிவித்தது இந்திய அணி.
யார் இந்த ஷாபாஸ் நதீம்?
அப்போது தான் பலரும் யார் இந்த ஷாபாஸ் நதீம் என தேடத் துவங்கினார்கள். ஷாபாஸ் நதீம் சுமார் 15 ஆண்டுகளாக முந்தைய பீகார் மற்றும் தற்போதைய ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அணியில் ஆடி வருகிறார்.
அசத்தல் வீரர்
110 முதல் தர போட்டிகளில் 424 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் அவர். மேலும், இரண்டு முறை ரஞ்சி தொடரில் 50 விக்கெட்டுக்கும் மேல் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே இவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
உள்ளூர் வீரர் நதீம்
மூன்றாவது டெஸ்ட் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் நிலையில், உள்ளூர் சுழற் பந்துவீச்சாளரை ஆட வைத்தால் ஆடுகளம் பற்றிய அதிக புரிதலுடன் ஆடுவார் என்பதால் கேப்டன் கோலி அவரை அணியில் சேர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மூடி மறைத்த காரணம்
இரண்டு நாட்களுக்கு முன்பே ஷாபாஸ் நதீமை கொல்கத்தாவில் இருந்து அழைத்துள்ளது இந்திய அணி. ஆனால், இந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டு வந்தது. போட்டிக்கு முந்தைய நாள் மாலை வரை இதை மூடி மறைக்க காரணம், தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக இருக்கலாம்.
தென்னாப்பிரிக்கா திட்டம்
இந்தியா முன்பே இந்த மாற்றத்தை கூறி இருந்தால் எப்படியும் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு ஆட உள்ளது. அதனால், தான் குல்தீப் யாதவ்வை மாற்றுகிறார்கள் என்று உஷார் ஆகி அதற்கேற்ப திட்டம் தீட்டி இருக்கும். அதனாலேயே, கோலி மூடி மறைத்து திட்டம் தீட்டி இருக்கலாம்.