முதல் இன்னிங்க்ஸ்
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 502 ரன்களும், தென்னாப்பிரிக்கா 431 ரன்களும் குவித்தன. இந்தியா 71 ரன்கள் முன்னிலை பெற்றது. அப்போது போட்டியில் இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் இருந்தன.
இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம்
இந்தியா தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடியாக ஆடி ஓவருக்கு 4.82 என்ற ரன் ரேட்டில் 323 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடைசி நாள் நிலை
நான்காம் நாள் இறுதியில் அந்த அணி 11 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது. ஐந்தாம் நாள் 9 விக்கெட்களுடன் டிரா செய்ய தென்னாப்பிரிக்கா போராடும் என பலரும் கருதினர். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் வெற்றி பெறவும் அந்த அணிக்கு வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் கூறினர்.
தோல்வி அடைந்தது
ஆனால், இந்தியாவின் உத்தியால் கடைசி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியாவின் அந்த திட்டம் என்ன?
இந்தியாவின் திட்டம்
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாத நிலையில், அனைத்து பந்துகளையும் ஸ்டம்புகளை நோக்கி வீசி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க முடியாத வகையில் அழுத்தம் கொடுத்து விக்கெட் வீழ்த்துவது தான் இந்திய அணியின் திட்டம்.
சரிந்த விக்கெட்கள்
அந்த திட்டம் சரியாக வேலை செய்தது. இந்தியா எடுத்த பத்து விக்கெட்களில் இரண்டு மட்டுமே கேட்ச் ஆகி கிடைத்த விக்கெட்கள். மற்றவை அனைத்துமே பவுல்டு அவுட் (5) அல்லது எல்பிடபுள்யூ (3) முறையில் கிடைத்தது.
ஷமி துல்லிய பந்துவீச்சு
ஷமி தன் துல்லியமான பந்து வீச்சால் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார், அதில் நான்கு விக்கெட்கள் பவுல்டு அவுட் முறையில் கிடைத்தது. வேகப் பந்துவீச்சுக்கு பெரிய வாய்ப்பு இல்லாத நிலையிலும், விக்கெட்களை அள்ளினார் ஷமி.
ஜடேஜா அபாரம்
மறுபுறம் ஜடேஜா தன் சுழற் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை நோக்கி பந்து வீசி நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அவர் ஆச்சரியம் அளித்தார். அந்த ஓவர் தான் தென்னாப்பிரிக்க அணி இனி வெற்றி பெறவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.
ஸ்டம்ப் தான் குறி
பத்து விக்கெட்களில் எட்டு விக்கெட்கள் ஸ்டம்ப்பை பதம் பார்க்கும் வகையிலான பவுல்டு அவுட் மற்றும் எல்பிடபுள்யூ விக்கெட்கள். மீதமுள்ள இரண்டு கேட்ச்களும் கூட ஸ்டம்புகளுக்கு குடி வைத்து வீசப்பட்டு கிடைத்தவை தான்.
சரண்டர் ஆன தென்னாப்பிரிக்கா
இந்தியாவின் இந்த உத்தியை எதிர்பார்க்காத தென்னாப்பிரிக்க வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். கடைசி நேரத்தில் முத்துசாமி 49*, பீடிட் 56, ரபாடா 18 ரன்கள் எடுத்து அந்த அணியின் தோல்வியை சிறிது நேரம் தள்ளிப் போட்டனர்.