இரு நாட்களாக மழை
தரம்சாலாவை சுற்று உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது, போட்டி நாள் அன்று காலை முதல் மழை பெய்து வந்தது. ஆனால், வானிலை அறிக்கை நம்பிக்கை அளிக்கும் படி இருந்தது.
வானிலை அறிக்கை சொன்னது என்ன?
வானிலை அறிக்கையின் கணிப்பில், போட்டி நேரமான மாலை ஏழு மணி அளவில் மழை இருக்காது. காற்றில் ஈரப்பதம் இருக்கும் என்று மட்டுமே கூறப்பட்டு இருந்தது. அதனால், ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
மழை பெய்தது
ஆனால், போட்டி துவங்க சில மணி நேரம் முன்பு இருந்தே மழை கொட்டி வந்தது. அதனால், ஆடுகளம் மூடப்பட்டு இருந்தது. மைதானத்தின் மூடப்படாத பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது.
டாஸ் தாமதம்
மழைக்கு நடுவே தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்திய வீரர்கள் மழைக்கு நடுவே மைதானத்துக்கு வந்தனர். எனினும், இடைவிடாமல் பெய்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால், இந்திய ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 மோதல் என்றால் சுவாரசியம் இருக்கும். மேலும், இந்திய அணி, இதுவரை சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதில்லை.
தவறான வானிலை அறிக்கை
அந்த குறையை போக்கி வெற்றி பெறுவதை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் மழையால் வெறுப்படைந்தனர். அதே சமயம், மழை வராது என்ற தவறான வானிலை அறிக்கையை நம்பி இருந்த ரசிகர்கள் போட்டி துவங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
போட்டி ரத்து
ஆனால், மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது. டாஸ் போடப்படவில்லை, ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மேலும், போட்டி துவங்க வேண்டிய நேரத்தில் இருந்து வெறும் 50 நிமிடத்தில், போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தது வியப்பை ஏற்படுத்தியது.
அடுத்த இரு போட்டிகள்
முதல் டி20 மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் மட்டுமே மோத உள்ளன. இரண்டாம் போட்டி மொஹாலியில் வரும் செப்டம்பர் 18, புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. மூன்றாம் போட்டி செப்டம்பர் 22, ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை முதல்..
2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முதல் கிரிக்கெட் போட்டிகளில் மழை குறுக்கிடுவது வாடிக்கை ஆகி உள்ளது. சமீப நாட்களில் ஆஷஸ் தொடர், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர், இலங்கை - நியூசிலாந்து தொடர் என மழையால் பல போட்டிகள் பாதிக்கப்பட்டன.