போட்டியில் என்ன நடந்தது?
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்றது. முதல் இன்னிங்க்ஸில் 502ரன்கள் குவித்து 7 விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா 431 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா தோல்வி
71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடியாக ஆடி 323 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா 191 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த ஆறு பேர்
ஐந்தாம் நாள் வரை தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி அல்லது டிரா செய்ய வாய்ப்பு இருந்தது. அப்படி இருந்தும் தென்னாப்பிரிக்க அணியின் தோற்க முக்கிய காரணம் ஆறு இந்திய வீரர்கள் தான். அந்த ஆறு வீரர்களும் தேவையான நேரத்தில் சரியாக செயல்பட்டதால் தான் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்க்ஸ் ரோஹித்
முதல் இன்னிங்க்ஸில் துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா, போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டு தென்னாப்பிரிக்க அணியை மிரட்டினார். 176 ரன்கள் குவித்து அசத்தினார்.
மாயங்க் அகர்வால் இரட்டை சதம்
ரோஹித்துடன் இணைந்து 317 ரன்களுக்கு கூட்டணி அமைத்த மாயங்க் அகர்வால், 215 ரன்கள் குவித்து தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். இவர்கள் இருவரின் ஆட்டத்தால் இந்தியா 5௦2 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
அஸ்வின் மிரட்டல்
முதல் இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் இந்தியா கொஞ்சம் சுமார் தான். தென்னாப்பிரிக்கா எளிதாக சமாளித்து 431 ரன்கள் வரை குவித்தது. அஸ்வின் எடுத்த 7 விக்கெட்கள் தான் இந்திய அணியை முதல் இன்னிங்க்ஸில் காப்பாற்றியது..
இரண்டாம் இன்னிங்க்ஸ் ரோஹித் சதம்
அடுத்து நான்காம் நாளில் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய இந்திய அணி விக்கெட் இழக்காமல் விரைவாக ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதை சிறப்பாக செயல்படுத்தினார் ரோஹித் சர்மா. அவர் 127 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
புஜாரா திடீர் அதிரடி
அவருக்கு ஒத்துழைப்பு அளித்து முதலில் படு நிதனாமாக ஆடி பின் வேகம் எடுத்த புஜாரா 81 ரன்கள் குவித்தார். புஜாரா இத்தனை வேகமாக ரன் குவிப்பாரா? என அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 13 ஃபோருடன், 2 சிக்ஸ் கூட அடித்து இருந்தார் புஜாரா.
ஜடேஜா எடுத்த 4 விக்கெட்
தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கு. அந்த நிலையில், நான்காம் நாளின் இறுதியில் ஜடேஜா முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்த எல்கர் விக்கெட்டை வீழ்த்தினார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலைய வைத்தார்.
துல்லியம் காட்டிய ஷமி
ஷமி முதல் இன்னிங்க்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆனால், இரண்டாம் இன்னிங்க்ஸில் மனிதர் துல்லியமான பந்துவீச்சால் மிரட்டினார். ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய அவர், அதில் நான்கு பவுல்டு அவுட் செய்து அசத்தினார். இந்த ஆறு வீரர்கள் தான் தென்னாப்பிரிக்க அணியின் தோல்விக்கும், இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணம். இவர்களில் இரண்டு இன்னிங்க்ஸிலும் கலக்கிய ரோஹித் சர்மா தான் வெற்றிக்கு முக்கிய காரணம்.